கப்பல் கட்டும் நிறுவனமான கெப்பல் ஃபெல்ஸ் தொடர்பில் எழுவர் மீது நேற்று பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்த 40 வயது எல்வின் லிம் வீ லுன் மீது 46 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இதர நிறுவனங்களுக்கு ஒப்பந்தக் குத்தகைகளை வழங்கி அதற்கு கைமாறாக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
இதற்காக ரோட்டரி ஆஃப்ஷோர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் திட்ட இயக்குநரான 45 வயது ராஜவிக்ரமன் ஜெயபாண்டியன், மெகாமரின் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநரான 54 வயது கோ ங்காக் எங் ஆகியோருடன் சேர்ந்து அவர் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
மூன்று நிறுவனங்களை உள்ளடக்கிய விவகாரத்தில் லஞ்சத்துக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் வழங்கும் குற்றச்செயல்கள் 2014க்கும் 2017க்கும் இடையில் நடைபெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மூவரும் சேர்ந்து மூன்று நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 879,000 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகையை மூவரும் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.
திரு கோ, மூன்று நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெறுவதற்கு தரகராகச் செயல்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ராஜவிக்ரமனும் கோவும் கூடுதலாக தலா மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். இதே போன்று ேவறு விவகாரத்தில் லஞ்சத்துக்கு வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் நோக்கத்தில் இருவரும் செயல்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உதவியாக இருந்ததற்காக ராஜவிக்ரமன் கோவிடமிருந்து சுமார் 7,000 வெள்ளியை வெகுமதியாகப் பெற்றுள்ளார்.
வரும் நவம்பர் 11ஆம் தேதி லிம், கோ, ராஜவிக்ரமன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகின்றனர்.
இந்த நிலையில் கெப்பல் ஃபெல்ஸ் பேச்சாளர் ஒருவர், 2019ஆம் ஆண்டிலேயே லிம் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எந்தவித கருத்தும் இதன் தொடர்பில் தெரிவிக்க முடியாது என்றும் அந்தப் ேபச்சாளர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில் திரு கோவின் நண்பரான 48 வயது ஓங் டுன் சாய் மீது பத்து ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
ஒரு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணங்களைத் தயாரிக்க உதவியதற்காக அவர் கோவிடமிருந்து மொத்தம் 15,100 வெள்ளி மதிப்புள்ள வெகுமதிகள் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இவர், நவம்பர் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவிருக்கிறார். லஞ்சத்துக்கு வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற்றவர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
டைட்டான் ஆஃப்ேஷார் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் யூ கே சூன், 50, ஸ்பெக்ட்ரமா மரைன் அண்ட் இண்டஸ்டிரியல் சப்ளைசின் இயக்குநரான கோ ஷெங் லி ஸ்டான்லி, 33, குரோவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஃபத்குல்லா டியாப், 59 ஆகிய மூவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மூவருக்கு S$196,700 மதிப்புள்ள லஞ்சத்தை வழங்கியதன் தொடர்பில் யூ ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
கோ ஷெங் லி ஸ்டான்லி, ஏறக்குறைய 190,900 வெள்ளி லஞ்சம் வழங்கியதாக 21 குற்றச்சாட்டுகளையும் ஃபத்குல்லா, 492,300 வெள்ளி மதிப்புள்ள வெகுமதிகளை வழங்கியதாக 18 குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகின்றனர்.
யூவும் ஃபத்குல்லாவும் நவம்பர் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர். கோ ஷெங் லி ஸ்டான்லி நவம்பர் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திக்கிறார்.