மின்-ஸ்கூட்டர் விபத்தில் பாதிக்கப்பட்டவரின் செய்தியைப் படித்த 13 வயதுச் சிறுமி ஒருவர், மனம் உருகி, அவருக்கு எப்பாடுபட்டாவது உதவ வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
மின்னஞ்சல் மூலம் பலருக்குக் கடிதம் எழுதியதன் மூலம் $164,000 நிதி திரட்டியுள்ளார்.
செயின்ட் ஜோசப் அனைத்துலகப் பள்ளியில் 7ஆம் வகுப்புப் பயிலும் சோபியா சியாம், விபத்தில் மூளை பாதிப்பால் அவதியுறும் 57 வயது திருமதி ஆங் லியூ கியோவுக்கு உதவ தனது தாயின் துணையுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய அளவில் நிதிதிரட்டும் இயக்கத்தைத் தொடங்கினார்.
சிறுமியின் முயற்சியால் கடந்த இரண்டு மாதங்களில் 1,459 பேர் திருமதி ஆங் லியூ கியோவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.
இவ்வளவு பேர் நிதியளித்தது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகக் கூறியுள்ளார் சிறுமி சோபியா.
முகம் தெரியாத எத்தனையோ பேர் நிதி அளிக்க முன் வந்ததோடு தமது முயற்சிக்கு ஊக்கமும் அளித்ததாகக் கூறுகிறார் சோபியா.
2016ஆம் ஆண்டு செப்டம்பரில் பாசிர் ரிஸ் டிரைவ் 1, பேருந்து நிறுத்தத்தில் இந்த மின்-ஸ்கூட்டர் விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்தார் திரு லியோங்கின் மனைவி 57 வயது ஆங் லியூ கியோவ்.
அந்த விபத்துக்குப் பின் அவரால் பேசவோ, படிக்கவோ, எழுதவோ முடியவில்லை.
உணவருந்துவது, உடை அணிவது, கழிவறையைப் பயன்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளில்கூட அவருக்கு யாராவது உதவி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்.