அரசாங்க ஊழியர்கள் தங்களது வேலைக்கான கையடக்கக் கணினிகளில் எவ்வித சிறப்புக் கருவிகளையும் பொருத்தாமல் பாதுகாப்பான இணைய வசதிகளைப் பெறுவர்.
தொலைவில் இருந்து இயக்கக்கூடிய இணைய உலாவி (பிரௌசர்) அதிநவீன தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியமாகிறது.
அரசாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள 146,000 பணியாளர்களில் பெரும்பான்மையினர் வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல், எஸ்ஐஎஸ் எனப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவர்.
இதன்மூலம் பாதுகாப்பான முறையில் சமூக ஊடகங்களுக்குச் செல்வது, மின்மடல் அனுப்புவது, கோப்புகளை இணைப்பது போன்றவற்றை அவர்களால் செய்யமுடியும். இதனை அரசாங்கத்தின் அறிவார்ந்த நாடு மற்றும் மின்னிலக்கக் குழு (எஸ்என்டிஜிஜி) நேற்று அறிவித்தது.
தற்போது அரசாங்க அலுவலகங்களில் ‘ஐஎஸ்எஸ்’ என்னும் தொழில்நுட்பத்திலான இணையக் கட்டமைப்பு நடப்பில் உள்ளது.
இந்தத் தொழில்நுட்பம், பயனாளர்கள் இணைய உலாவியைப் பயன்படுத்தும்போது அவர்களது பணியிடக் கணினிக் கட்டமைப்
புடனான தொடர்பைத் துண்டித்துவிடும். அரசாங்கத்தின் இணையத்தை ஊடுருவல்களில் இருந்தும் அரசாங்கத் தரவுகளைப் பாதுகாப்பதற்கும் இந்த முறை கையாளப்பட்டது.
அவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் இணையத்தைப் பயன்படுத்தி வந்த அரசாங்க ஊழியர்களில் 108,000 பேர் புதிய தொழில்நுட்பத்திலான ‘எஸ்ஐஎஸ்’ இணையப் பயன்பாட்டு முறைக்கு மாறவிருக்கின்றனர்.
முக்கியமான தரவுகளைக் கையாள்பவர்கள் மட்டும் வழக்கத்தில் உள்ள ‘ஐஎஸ்எஸ்’ முறையைப் பின்பற்றுவதைத் தொடர்வர்.
இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கச் சேவைத்துறையின் உற்பத்தி அதிகரிக்கும் என்று
அந்தக் குழு தெரிவித்தது.
பலதரப்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து அதை மேம்படுத்தி பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்புக் கட்டமைப்பை உள்ளடக்கிய தொலைதூர இணைய
உலாவி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முக்கியமான தரவுகளைப் பாதுகாக்க மேம்பட்ட பாதுகாப்பு முறைகளை நாம் கொண்டிருப்பது மிக அவசியம் என்று எஸ்என்டிஜிஜி குழு தெரிவித்தது.
புதிய தொலைதூர இணைய உலாவி தொழில்நுட்பத்தின் வாயிலாக இணையத்தைப் பயன்படுத்தும்போது அது இணையம் சார்ந்த தரவுகளை மட்டும் தனியே கையாள்வதற்கு ஒரு தரவுக்கொள்
கலனை உருவாக்கிக்கொள்ளும்.
இதன்மூலம் இணையத்தொடர்புக்கும் அரசாங்கத்தின் கணினிக் கட்டமைப்புகளுக்கும் எவ்வித நேரடி இணைப்பும் இல்லாமல் இருக்கும். எனவே, கணினிக் கட்டமைப்பை செயலிழக்க வைக்கும் வகையிலும் தரவுகளைத் திருடும் வகையிலும் ஆன கணினிக் கிருமிகள் மற்றும் ஊடுருவல்கள் போன்றவை நிகழ்வதற்கு வாய்ப்பில்லை.
இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்க ஊழியர்கள் இனி அனுமதிக்கப்பட்ட இணையத் தளங்களுக்கு தங்கள் கோப்புகளைப் பதிவேற்றம் செய்யவும் முடியும்.