கடைசி நிமிடத்தில் ஊழியர்களுக்கு மறுபயிற்சியளிக்கும் முயற்சியில் இறங்குவதைவிட, எதிர்கால வேலைகளுக்காக அவர்களை முன்கூட்டியே தயார்ப்படுத்த வேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் முதலாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“வேலைச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப சிங்கப்பூரர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், போட்டித்தன்மையின் அதிகரிப்பைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் ஊழியரணியைவிட்டு விலக வேண்டியிருக்கும்,” என்றும் மூத்த அமைச்சர் எச்சரித்தார்.
ஓசிபிசி வங்கிக் குழுமத்தின் தலைமை நிர்வாகி திரு சேமுவல் சியெனுடன் வேலை இணைப்பு மற்றும் ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்தல் பற்றிய கலந்துரையாடலில் திரு தர்மன் பங்கேற்றார்.
“முதலாளிகள் தங்களிடம் ஒரு திறன்மிக்க ஊழியரணி இருப்பதை உறுதி செய்ய, கடைசி நேரம் வரை காத்திருக்கக்கூடாது. ஊழியர்கள் வேலையில் இருக்கும்போதே அவர்களை எதிர்கால வேலைகளுக்குத் தயார்ப்படுத்த வேண்டும்.
“வேலைகளை இழந்துள்ள ஊழியர்களுக்கு அவர்களின் திறன்களுக்கேற்ப பயிற்சியைத் தேர்வு செய்து அவர்களை அதில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு சவால்களைச் சமாளிக்க முதலாளிகளும் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள ஊழியர்களும் முன்வந்தால் இரு தரப்பினருக்கும் நன்மை கிட்டும்,” என்று மூத்த அமைச்சர் விவரித்தார்.
ஓசிபிசி வங்கி தனது ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளன என்று தெரிந்துகொள்ள அங்கு நேற்று வருகை புரிந்தார் திரு தர்மன்.
பின்னர் வங்கியியல், நிதிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் திரு தர்மன், ஓசிபிசி வங்கிக் குழுமத்தின் தலைமை நிர்வாகியும் தேசிய வேலைகள் மன்றத்தின் உறுப்பினருமான திரு சேமுவல் சியெனுடன் பங்கேற்றார்.
வங்கியியல், நிதிக் கழகம், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், என்டியுசியின் வேலைவாய்ப்பு, வேலைநியமனக் கழகம் ஆகியவை தனது வேலை மேம்பாட்டுப் பங்காளிகளாக நியமிக்கப்பட்டுள்ளன என்று தேசிய வேலைகள் மன்றம் நேற்று அறிவித்தது.
இந்த மூன்று அமைப்புகளும் சேர்ந்து நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, புதிய வேலை மற்றும் வேலைப்பயிற்சி வாய்ப்புகளை உருவாக்கவும் சிங்கப்பூரர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதையும் உறுதி செய்யும்.
வங்கியியல், நிதிக் கழகம், அடுத்த ஆறு மாதங்களில் நிதித் துறையில் வேலை அமர்த்தும் வாய்ப்புகள், வேலையிழப்புகள் ஆகியவை பற்றி நன்கு ஆராயும்.
இந்தத் தகவலைக் கொண்டு அது இதர நிதி அமைப்புகளுடன் சேர்ந்து ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளித்தல், புதிய பயிற்சிகளை வடிவமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
கலந்துரையாடலில் பங்கேற்ற திரு சியென், “நிதித் துறை கண்டு வரும் மாற்றங்களை ஓசிபிசி ஆராய்ந்து, எதிர்கால சவால்களுக்கு தொழில்நுட்பம், தரவு, மின்னிலக்கமயம் ஆகிய பிரிவுகளில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்று கண்டறிந்தது.
“அதற்காக ஓசிபிசி இந்தப் பிரிவுகளில் ஊழியர்களின் மறுபயிற்சிக்கு $20 மில்லியனை ஒதுக்கியுள்ளது. மேலும் நிதி தொடர்பான நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியமர்த்தும்போது அவர்களிடம் உள்ள திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்படும்,” என்றும் விளக்கினார்.
பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு தர்மனும் திரு சியெனும், நிதிச் சேவைநடத்துபவர்கள் ஊழியர்களின் பயிற்றுவிப்பாளர்களாகவும் கூடுதல் பங்காற்றலாம் என்றும் அப்போது ஊழியர்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களிடம் பயிற்சி பெறுவதை விரும்புவார்கள் என்றும் கூறினர்.