இசைத் தயாரிப்பு, இசைப் பள்ளி, இசைக் குழு, இசைக் கலைஞர், என்று இசையைப் பல அவதாரங்களில் ரசித்து அனுபவித்திருக்கிறார் இந்த துடிப்புமிக்க டிரம்ஸ் கலைஞர். கலைகளில் முழுநேரமாக ஈடுபடுவதற்குத் தயக்கம் காட்டும் நம் இளம் சிங்கப்பூரர்களுக்கிடையே இசை வழி தனக்கென ஒரு தனி அடையாளத்தையே உருவாக்கியுள்ளார் ஜோவாஷ் எடேல்ஸ்டின், 25.
இந்த இளம் வயதிலேயே ‘ஹேய் டிரம்ஸ் ஸ்டூடியோ’ (Hei Drums Studio) என்ற டிரம்ஸ் இசைப் பள்ளியை நடத்தி வருகிறார் இவர்.
டிரம்ஸ் இசைப் பயணத்தில் ஆர்வம் பிறந்தது பற்றி...
இவரின் இசைப் பயணம் 7 வயதில் துவங்கிவிட்டது. ஒவ்வொரு வாரமும் அவரின் குடும்பத்தார் செல்லும் தேவாலயத்தில் தன்னுடைய அண்ணன் டிரம்ஸ் வாசிப்பதைப் பார்த்து வளர்ந்த ஜோவாஷிற்கு, தன்னிடம் உள்ள திறன் மூலம் மற்றவர்களின் தெய்வ வழிபாட்டிற்கு அர்த்தம் சேர்க்கவேண்டும் என்று எண்ணினார். தேவாலயத்தில் வாசிக்கத் தொடங்கி இன்று சிங்கப்பூரின் பிரபல மேடைகளிலும் அரங்கங்களிலும் தனது இசை வழி பலரின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இசைப் பள்ளியின் தரத்தை நிலைநாட்டுவதைப் பற்றி...
“எதைச் செய்தாலும் நீங்கள் செய்யும் தொழிலில் திறன் வாய்ந்தவராக விளங்கவேண்டும். நாம் விற்கும் பொருளோ வழங்கும் சேவையோ சிறந்த தரத்தில் இருந்தால்தான் அதைப் பெறுவதற்கு மக்கள் நாடி வருவர். அதேபோல்தான் நான் இந்த பள்ளியைச் சிறந்த தரத்துடன் நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நானும் டிரம்ஸ் பயிற்சி செய்வதோடு மாணவர்களுக்கு கற்பிக்கும் உத்திகளைப் பற்றி ஆராய்ச்சியும் செய்வேன். எனது ஸ்டூடியோ, மாணவர்களுக்கான கருவிகள், கற்கும் சூழல் என அனைத்துமே அவர்களது கற்றல் அனுபவத்தை மேம்படுத்த உதவ வேண்டும்,” என்று கூறுகிறார் ஜோவாஷ். தற்போது இவரின் பள்ளியில் ஐந்து வயது சிறுவர் முதல் மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவர் வரை டிரம்ஸ் கற்றுக்கொள்கின்றனர்.
தன் இசை மீது கொண்ட நம்பிக்கை, ஈடுபாடு பற்றி...
பொதுவாக ஒரு தொழிலைத் தொடங்க விரும்புபவர், அதற்கான சிந்தனையையும் ஆர்வத்தையும் நடுத்தர வயதில்தான் பெறுவர். ஆனால் ஜோவாஷிற்கு இசைப் பள்ளி நடத்த வேண்டும் என்ற வேட்கை சிறுவயதிலிருந்தே இருந்தது.
இசையைப் பொழுதுபோக்காக கருதாமல், தனது இன்பத்தைப் பிறரும் பெற வழி செய்திருக்கிறார் இவர். விருந்தோம்பல் துறையில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ள ஜோவாஷிற்கு தனது குறிக்கோள் தெளிவாக தெரிந்தது. வேறு துறை சார்ந்ததாக தனது படிப்பு இருந்தாலும் இசைதான் இறுதிவரைதனக்குக் கைகொடுக்கும் என்று நம்பினார்.
“எனக்குப் பிடித்தமான இசையை என் தொழிலாக மேற்கொண்டு வருவது ஒவ்வொரு நாளும் உற்சாகத்தை அளித்து வருகிறது. வருமானம் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. மனநிறைவைத் தரும் ஒன்றைச் செய்வது கடவுள் தந்த வரம். செய்யும் தொழிலில் சிறந்து விளங்கி முன்னேறினால் வெற்றி தானாகவே வந்து சேரும்,” என்றார்.
சவால்களைப் பற்றி...
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்டாலும் நிதி பற்றாக்குறை, போதிய வாய்ப்புகள் கிட்டாதது என இவரின் இசைப் பயணத்தில் சவால்கள் பல. ஆனால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே ஒவ்வொரு முறையும் பழக்கமாக்கிக்கொண்டார் இவர். தனது ஸ்டூடியோ இருக்கும் வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்குத் தானாகவே சென்று பள்ளியை விளம்பரப்படுத்துவது, தனது வருமானத்தை ஸ்டூடியோ மேம்பாட்டிற்காகச் செலவிடுவது போன்ற பல முயற்சிகளை எடுத்து வருகிறார் ஜோவாஷ். அதிக வருமானம் ஈட்டினால்தான் அது வெற்றிகரமான தொழில் என்பதற்கு விதிவிலக்காக இருக்கும் இவர், இன்றைய இளையர்களுக்கு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளார்.
“கலையை முழுநேரத் தொழிலாக மேற்கொள்ள விரும்பும் இளைஞர்கள், அஞ்சாமல் தைரியமாக அதில் முதல் படியை எடுத்து வையுங்கள்,” என்கிறார் ஜோவாஷ்.
செய்தி: இந்து இளங்கோவன்
படம்: ஜோவாஷ்