தேசிய நூலக வாரியம் சிறுவர்களுக்கான புத்தகம் ஒன்றை பெரியவர்களுக்கான புத்தகங்கள் இருக்கும் பகுதிக்கு மாற்றியுள்ளது. மாற்றப்பட்ட அந்தப் புத்தகத்தில் இனவெறி குறித்து கருத்துகள் இருந்ததாக வந்த புகாரை அடுத்து வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தது.
‘ஹு வின்ஸ்’ என்ற தலைப்பிலான சீனமொழிப் புத்தகம் குறித்து வாரியத்தின் கலந்தாய்வுக்குழு மேற்கொண்ட புத்தக ஆய்வுக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வாரியம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
பள்ளியில் இனரீதியிலான கேலி, கிண்டல் போன்றவற்றில் ஈடுபடும் சிறுவர்களைத் திருத்தி அவர்கள் தவறான புரிந்துணர்வைக் கொண்டிருந்தால் அவர்களை நல்வழிப்படுத்துதலுக்கு பெற்றோரும் பிள்ளைகளின் காப்பாளர்களும் இந்தப் புத்தகத்தைப் படித்து விவாதிக்கலாம் என்று வாரியம் கூறியது. வு ஸிங் ஹுவா என்பவரால் எழுதப்பட்ட ‘ஹு வின்ஸ்’ என்னும் புத்தகம், பொதுமக்களின் புகாரை அடுத்து நூலகத்தில் இருந்து ஜூலை 19ஆம் தேதி அகற்றப்பட்டு, கலந்தாய்வுக்குழுவின் மதிப்பீட்டுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
படங்களைக் கொண்டு கதைசொல்லும் அந்தப் புத்தகம், ஏழு வயது முதல் ஒன்பது வயது வரையிலான சிறுவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கறுத்த நிறமுடைய சிறுவன் ஒருவன் எண்ணெய் வடிந்தநிலையில் சுருள் முடியைக் கொண்டுள்ளான். அவன் பெயர் ‘மோ மோ’. சீன மொழியில் ‘மோ மோ’ என்பது அதிகமான முடி என்று பொருள்.
இந்தப் புத்தகம் ‘மார்ஷல் கேவெடிஷ் எடுகேஷன்’ என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ‘அமேஸிங் அட்வன்ட்சர்ஸ் ஆஃப் பி பி’ என்ற தலைப்பிலான புத்தகத் தொகுப்பின் ஒரு பகுதியே ‘ஹு வின்ஸ்’ புத்தகம். நூலகத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்த எஸ்டெல்லா யங், 42 என்பவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜூலை மாதம் இதுகுறித்து உம் யூசோஃப் என்ற பெயரில் கருத்துத் தெரிவித்துளளார். அதில், “அதிர்ச்சியூட்டும் இனவாதி’ என்றும் மோசமான இனவாதக் கருத்துகள் வெளிப்படையாக எழுதப்பட்டுள்ளன. இந்தப் படப்புத்தகத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இந்த கறுப்புத் தோலையுடைய சிறுவனின் பாத்திரம் உள்ளது எனச் சாடியிருந்தார். இதுகுறித்து புத்தக வெளியீட்டு நிறுவனம் பின்னர் தனது வாசகர்களுக்கு வருத்தம் தெரிவித்து ஜூலை 21ஆம் தேதி அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அத்துடன் அந்தப் புத்தகத்தின் விற்பனையை நிறுத்தியதோடு, கடைகளில் உள்ள புத்தகங்களையும் மீட்டுக்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது.