புதிதாக ஆறு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இன்று (அக்டோபர் 20) உறுதியானது. இத்துடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 57,921.
புதிய கிருமித்தொற்று நோயாளிகளில் இருவர் ஊழியர் தங்கும் விடுதிவாசிகள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
எஞ்சிய நால்வரும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள். சிங்கப்பூரை அடைந்ததும் இவர்களுக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதிய சம்பவங்களில் சமூகத் தொற்று ஏதும் இல்லை.
இதற்கிடையே, நேற்று உறுதியான நான்கு புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் குறித்து அமைச்சு கூடுதல் விவரம் வெளியிட்டது.
நால்வரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். 18 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்ட அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், ஒருவர் நிரந்தரவாசி, ஒருவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர் மற்றும் ஒருவர் சிறப்பு அனுமதி அட்டை வைத்திருப்பவர் என்று தெரிவிக்கப்பட்டது.
மூவர் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள் என்றும் நான்காவது நபர் பிலிப்பீன்சிலிருந்து வந்தவர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் ஜூரோங் பாய்ண்ட் பேரங்காடியும் அல்ஜுனிட் பகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் கிளையும் சேர்க்கப்பட்டுள்ளன.