கற்றலில் சிரமம் எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் உதவி கல்வியாளர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் வாழ்க்கைத் தொழில் வளர்ச்சிக்கான கூடுதல் வழிகள் இருக்கப்போகின்றன. இவர்களது முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் கற்றல் மற்றும் நடத்தை தொடர்பான ஆதரவை வழங்குவதற்காக உதவி கல்வியாளர்களுக்கான உயர் பதவிகள் உருவாக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. இத்தகையோர், வழக்கமான பள்ளிகளில் குறைந்தளவு சிறப்புத் தேவை உடைய மாணவர்களுடன் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்கள்.
2020ல் உதவி கல்வியாளர் திட்டம் இரண்டு தடங்களாகப் பிரியும்போது உதவி கல்வியாளர்களுக்குச் சொந்தமான மேம்பாட்டு தடம் வழங்கப்படும் என்று கல்வியமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், உதவி கல்வியாளர்களுக்கிடையே உள்ள வெவ்வேறு பிரிவினரின் தேவைகளையும் குறிக்கோள்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தனது திட்டங்களை ஆராயும் என்று கல்வியமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், கூடுதலாக பல உதவி கல்வியாளர்களை ஈர்த்து அவர்களை அந்த வேலையில் தொடர்ந்து இருக்கச் செய்ய கல்வியமைச்சு விரும்புகிறது. தற்போது 2,000 உதவி கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 600 பேர் கற்றல் மற்றும் நடத்தை ஆதரவில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். சிங்கப்பூரிலுள்ள ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் இந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள இரண்டு கல்வி உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வோர் உயர்நிலைப் பள்ளிக்கும் இத்தகைய உதவியாளர் ஒருவர் இருப்பார்.
அடுத்த சில ஆண்டுகளில் கூடுதலான உயர் நிலை வேலைகளை கல்வியமைச்சு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் உருவாக்கத் தொடங்கும். கற்றல் மற்றும் நடத்தைக்கான இரண்டு உதவி கல்வியாளர்கள் அங்கு பணிபுரிவர். இளம் பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான தேவைகள், கவனக்குறைபாடு தொடர்பான சிறப்புத் தேவைகள் போன்ற வெவ்வேறு நிபுணத்துவங்களைக் கொண்ட பிரதான உதவி கல்வியாளர்கள் பலர் அங்கு பணிபுரிவது கல்வியமைச்சின் நீண்ட காலத் திட்டமாக உள்ளது. மாணவர்களின் தேவைகளுக்கு ஈடுகட்டும் விதமாக பள்ளிகளில் பணிபுரியும் இத்தகைய உதவி கல்வியாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது.