ஐ.நாவின் உலக உணவுத் திட்டத்திற்கு, இவ்வாண்டு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் சிங்கப்பூரரான திருவாட்டி ரதி பாலகிருஷ்ணன், 44.
திட்டம் பலரையும் சென்றடைந்து பலனளிக்க வேண்டும் என்பதற்காக தம்மால் முடிந்த அளவுக்குப் பாடுபட்டு வருகிறார்.
பசியைப் போக்குவது, சண்டை-சச்சரவால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைதி நிலவச் சூழலை மேம்படுத்துவது, போர்-சச்சரவுகளில் பசியை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க ஓர் உந்து சக்தியாக இருப்பது ஆகியவற்றின் தொடர்பில் உலக உணவுத் திட்டம் எடுத்து வரும் முயற்சிகளை நோபெல் பரிசுக்கான வெற்றியாளர்களைத் தேர்வுசெய்யும் பணிக்குழு சுட்டியிருந்தது.
நான்கு பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி ரதி, இவ்வாண்டு ஜனவரி முதல் அதிகாரபூர்வமாக வாஷிங்டனில் தம் பணியை மேற்கொண்டார்.
இருப்பினும், கொவிட்-19 நெருக்கடியால் தற்போது ரோம் நகரில் உள்ள உலக உணவுத் திட்டத்தின் தலைமையகத்தில் தம் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
தம் தனிப்பட்ட வாழ்க்கையையும் வேலை வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக இருக்கச் செய்து இரண்டிலும் சமநிலை காண்பதே தாம் வேண்டுவது என்றார் அவர்.
“என் குடும்பத்திற்கு நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். நாம் யாருக்காக சேவையாற்றுகிறோமோ, அவர்களும் அதே போல் தங்களின் குடும்பங்களுக்கு இருக்க விரும்புவர்,” என்று குறிப்பிட்டார்.
“கேட்பதற்கு எளிதான ஒன்றாக இருக்கும். ஆனால் உலகமே தவறான திசையை நோக்கிச் செல்கிறது என்பதுதான் உண்மை,” என்றும் அவர் தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான ஆர். பாலகிருஷ்ணனின் மகள் திருவாட்டி ரதி.