சிங்கப்பூரும் ஜெர்மனியும் இரு நாடுகளுக்கு இடையே சிறப்புப் பயண ஏற்பாடுகளைத் தொடங்க இணக்கம் கண்டுள்ளன.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சும் ஜெர்மானிய கூட்டரசு வெளியுறவு அலுவலகமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையே சிறப்புப் பயண ஏற்பாடுகளைத் தொடங்குவதற்கான தேதி இன்னமும் வெளியிடப்படவில்லை.
பயண ஏற்பாடுகளுக்கான விண்ணப்ப மற்றும் சுகாதார நடைமுறை போன்ற மேல் விவரங்கள் பிந்தைய தேதியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாட்டுடனும் சிங்கப்பூர் சிறப்புப் பயண ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. தற்போது இரண்டாவது கொரோனா கிருமித்தொற்று அலையை ஐரோப்பா எதிர்கொண்டு வருகிறது.
“இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக, அதிகாரபூர்வப் பயணங்களை மேற்கொள்ள இந்தச் சிறப்புப் பயண ஏற்பாடுகள் வழிவகுக்கும்,” என்று இரு நாட்டு அமைச்சுகளும் அறிக்கையில் தெரிவித்தன.
சிங்கப்பூரும் ஜெர்மனியும் ஏற்றுக்கொண்டுள்ள கொவிட்-19 தடுப்பு, பொதுச் சுகாதார நடைமுறைகளுக்குப் பயணிகள் உட்பட்டு நடக்க வேண்டும். சிங்கப்பூருக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே எதிர்காலத்தில் இதுபோன்ற பயண ஏற்பாடுகளைத் தொடங்க இது ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் என்று இரு நாடுகளும் குறிப்பிட்டன.
சிங்கப்பூர் கடைசியாக ஹாங்காங்குடன் சிறப்புப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டது. தற்போது மலேசியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 வேறு நாடுகளுடன் சிங்கப்பூர் பயண ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, ஜெர்மனியில் குறுகியகாலம் தங்க சிங்கப்பூர்வாசிகள் அந்நாட்டிற்குச் செல்லலாம் என்று ஜெர்மனி நேற்று அறிவித்தது. ஜெர்மனியைச் சென்று அடைந்தவுடன் பயணிகள் தனிமை உத்தரவை நிறைவேற்ற தேவையில்லை. வரும் செவ்வாய்க்கிழமை இந்த நடைமுறை நடப்புக்கு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், சிங்கப்பூர்வாசிகள் அங்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த இவ்வாரம் ஐரோப்பிய மன்றம் பரிந்துரைகளை வெளியிட்டு இருந்ததைத் தொடர்ந்து ஜெர்மனியின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.