சிங்கப்பூரில் மிதக்கும் கணினித் தகவல் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க ‘கெப்பல் டேட்டா சென்டர்ஸ் ஹோல்டிங்ஸ்’ (கெப்பல் டிசி) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அந்த மையத்துக்குத் தேவைப்படும் மின்சக்தியைத் திரவ இயற்கை எரிவாயு மற்றும் நைட்ரஜன் மூலம் பெறுவது பற்றி இந்த நிறுவனமும் சிட்டி கேஸ் மற்றும் சிட்டி-ஓஜி கேஸ் எனர்ஜி சர்விசஸ் என்ற நிறுவனங்களும் கூட்டாக ஆராயும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இவை நேற்று புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.
அத்தகைய ஒரு தொழிற்பேட்டை இப்போது ஆய்வுக் கட்டத்தில் இருப்பதாக இந்த மூன்றும் நேற்று அறிவித்தன.
திரவ இயற்கை எரிவாயுக் கொள்முதல் பற்றியும் நீண்ட கால போக்கில் ஹைட்ரஜனுக்கு மாறுவது குறித்தும் இவை கூட்டாக ஆராயும். குளிர் எரிசக்தி பயனீட்டு வாய்ப்பு பற்றியும் ஆராயப்படும்.
சிட்டி கேஸ் நிறுவனமும் சிட்டி- ஓஜி நிறுவனமும் இந்தத் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்கள். இவை மிதக்கும் தொழிற்பேட்டைக்கு எரிசக்தி சிக்கன வழிகளை ஏற்படுத்தித் தரும். அதோடு கரிம வெளியீடும் குறைக்கப்படும் என்று கெப்பல் டிசியின் தலைமை நிர்வாக அதிகாரி வோங் வாய் மெங் தெரிவித்தார்.
கெப்பல் நிறுவனம் ‘இலக்கு 2030’ என்ற ஓர் இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி இந்த நிறுவனம் தனது உத்திகளில் இயற்கை வளத்தைக் கட்டிக்காக்க முக்கியத்துவம் அளிக்கிறது.
இப்போது இடம்பெறக்கூடிய ஒத்துழைப்பு எரிசக்தியை மிச்சப்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இருக்கும். இதன் மூலம் இந்த இலக்கை நிறைவேற்ற முடியும்.
மின்னிலக்கப் பொருளியலுக்கான தேவைகளைப் பாதுகாப்பான, நம்பத்தகுந்த, சுற்றுச்சூழலுக்கு தோழமையான வழிகளில் நிறைவேற்ற முடியும் என்றும் நேற்று மூன்று தரப்புகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கை குறிப்பிட்டது.
மிதக்கும் கணினித் தகவல் தொழிற்பேட்டை, திரவ இயற்கை வாயு மற்றும் ஹைட்ரஜன் எரிசக்தியுடன் கூடிய கணினித் தகவல் மையங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் பற்றி கெப்பல் குழுமம் ஆராய்ந்துவருவதாகவும் திரு வோங் கூறினார்.