சிங்கப்பூரின் அடுத்த ஐந்து ஆண்டுகால ஆய்வு, புத்தாக்கம், தொழில் முயற்சித் திட்டத்தில் மின்னிலக்கப் பொருளியல் முக்கிய அங்கம் வகிக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
நாட்டின் தொழில்நுட்பத் திறனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நிறுவனங்களுடன் பங்காளித்துவ முயற்சியில் ஈடுபடுவது அத்திட்டத்தில் அடங்கும்.
முன்பைவிட தற்போது அதிகமான பரிவர்த்தனைகள் இணையம்வழி நடத்தப்படுவதால் இணையப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
இரண்டு நாள் நடைபெறும் ‘ஃபார்ச்சுன் குளோபல் ஃபாரம்’ எனும் அனைத்துலகக் கருத்தரங்கில் நேற்று பேசிய திரு ஹெங், $20 பில்லியன் மதிப்பிலான இந்த ஆய்வு, புத்தாக்கம், தொழில் முயற்சித் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அளவு மின்னிலக்கமயமாதல் திட்டத்தில் செலவிடப்பட்டதைச் சுட்டினார்.
இறுதிப்படுத்தப்படும் ஆய்வு, புத்தாக்கம், தொழில் முயற்சித் திட்டத்தின்கீழ், மின்னிலக்கப் பொருளியலை உருவாக்குவதில் மேலும் கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் மின்னிலக்கப் பொருளியல் முக்கிய அங்கம் வகிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.
மின்னிலக்கப் பொருளியல் குறித்த கலந்துரையாடல் ஒன்றிலும் திரு ஹெங் பங்கேற்றார். ‘கிராப்’ வாடகை கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆன்டனி டானும் இதில் கலந்துகொண்டார்.
மின்னிலக்க உருமாற்றத்தின் சவால்கள், மற்ற உலக நாடுகளுடன் சிங்கப்பூர் தொடர்புப்படுத்திக்கொள்வதற்கான ஆற்றல் உள்ளிட்ட தலைப்புகளை ஒட்டி அவர்கள் கலந்துரையாடினர்.
மாணவர்கள், கிராப் ஓட்டுநர்கள், பொருள் விநியோக ஓட்டுநர்கள் ஆகிய தரப்பினருக்காக பயிற்சி, மேம்பாட்டுத் திட்டங்கள் சிலவற்றில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பங்காளித்துவ முயற்சியில் கிராப் ஈடுபடும் என்று நிகழ்ச்சியின் இறுதியில் திரு டான் அறிவித்தார்.
மின்னிலக்க ஆற்றலை வளர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதிலும் அவர்களுக்கு உதவுவது இதன் இலக்கு.
இந்தப் பங்காளித்துவ முயற்சியின் மூலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதிகபட்சம் 5,000 ஓட்டுநர்களையும் 250 உயர் கல்வி நிலைய மாணவர்களையும் சென்றடைய இத்திட்டம் முற்படுகிறது.