முந்தைய பொருளியல் மந்தநிலைகளைக் காட்டிலும், கொவிட்-19 நெருக்கடியால் உள்ளூர் சார்ந்த தொழில்துறைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சிங்கப்பூர் பொருளியல் மீள்வதற்கு நீண்டகாலம் ஆகலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.
நிறுவனங்களும் குடும்பங்களும் இன்னும் வருமான இழப்பை எதிர்கொண்டு வருவதாலும் அதிகரித்து வரும் நிச்சயமற்ற சூழலாலும் வரும் காலாண்டுகளில் பொருளியல் மீட்சியின் வேகம் மிதமடையும் என்று ஆணையம் தெரிவித்தது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் உருவெடுக்கும் பட்சத்தில், வளர்ச்சி குறையும் அபாயமுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டில் நாட்டின் பொருளியல் 5 முதல் 7% குறையலாம் என்ற அரசாங்கத்தின் முன்னுரைப்பை ஆணையமும் மறுஉறுதிப்படுத்தியுள்ளது.
தனது ஒட்டுமொத்தப் பொருளியல் மறுஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்ட ஆணையம், “முன்னோக்கிய பாதை நிச்சயமில்லாத் தன்மைகளால் சூழப்பட்டுள்ளது,” என்று எச்சரித்துள்ளது.
“சில துறைகள், குறிப்பாக பயணத்துறையும் நேரடித் தொடர்பை அதிகம் நம்பியுள்ள உள்ளூர் தொழில்துறைகளும் அடுத்த ஆண்டு இறுதியில்கூட கொரோனா தொற்றுக்கு முன்பிருந்த நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படவில்லை,” என்றது ஆணையம்.
கொரோனா பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்ததால், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் இதற்குமுன் இல்லாத அளவு சரிவைச் சந்தித்தது.
ஆயினும், பெரும்பாலான நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அடுத்த காலாண்டில் பொருளியல் சற்று மீண்டெழுந்தது.