மோசடி தொலைபேசி அழைப்புகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சிங்டெல் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டில் இதுவரையில் 5,000க்கும் மேற்பட்ட மோசடி அழைப்புகள் வந்துள்ளதாக சிங்டெல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சிங்டெல் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்ட புகார்கள் மட்டும் இந்த அளவுக்கு இருந்தன. அத்தகைய மோசடிக்காரர்கள், சிங்டெல் வாடிக்கையாளர் போல் அல்லது தொழில்நுட்பர் போல் நடிப்பார்கள்.
சிங்டெல் சேவை துண்டிக்கப்படும் என்றும் அப்படி நிகழாமல் தாங்கள் உதவப்போவதாகவும் சொல்லி ஏமாற்ற முயன்றவர்கள் சுமார் 10% என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய புகார்கள் தனக்கு வரவில்லை என்று தெரிவித்த எம்1 நிறுவனம், இருந்தாலும் வாடிக்கையாளர்கள் எப்போதுமே எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதேபோலவே ஸ்டார்ஹப் நிறுவனமும் எச்சரித்தது. மின்னிலக்க யுகத்தில், இத்தகைய மோசடிகள் பல வடிவங்களில் இடம்பெறும் என்பதால் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருந்துவர வேண்டும் என்றது ஸ்டார்ஹப்.