நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) ஊழியர்கள் தங்கள் வருடாந்திர விடுப்புகளில் சிலவற்றைப் பயன்படுத்தாமல் அதன் மூலம் பெறப்படும் தொகையை நன்கொடை செய்துள்ளனர்.
இதன்மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவ $10 மில்லியனுக்கும் அதிகமான தொகை நன்கொடை செய்யப்பட்டுள்ளது.
1,821 என்டியு ஊழியர்கள் ஏறத்தாழ 20,145 விடுப்பு நாட்களைப் பயன்படுத்தாமல் அவை மூலம் பெறப்படும் தொகையை நன்கொடை செய்துள்ளனர்.
ஒவ்வோர் ஊழியரும் சராசரியாக 11 விடுப்பு நாட்களைப் பயன்படுத்தாமல் நன்கொடைக்குப் பங்களித்தனர்.
சிலர் 15 விடுப்பு நாட்களைப் பயன்படுத்தாமல் நன்கொடைக்குப் பங்களித்தனர். என்டியு ஊழியர்களுக்கு அவரவர் வேலை நியமன நிபந்தனைகள், அவர்கள் வேலையில் சேர்ந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன ஆகியவற்றைப் பொறுத்து ஆண்டுக்கு 21 நாட்களிலிருந்து 42 நாட்கள் வரை விடுப்பு வழங்கப்படுகிறது.
“என்டியு மாணவர்கள் சிலரின் பெற்றோர் வேலைகளை இழந்துள்ளனர். அதன் காரணமாக அவர்களது வருமானம் குறைந்துள்ளது. எனவே, கொரோனா நெருக்கடி
நிலையின்போது இந்த மாணவர்களுக்கு உதவுவது மிகவும் முக்கியம்,” என்று என்டியு நிர்வாகத்தின் மூத்த துணை தலைவர் டான் ஏக் நா தெரிவித்தார்.
விடுப்பைப் பயன்படுத்தாமல் நன்கொடைக்குப் பங்களிக்க விரும்பிய ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டது.