சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் (எஸ்ஜிஎச்) நோயாளிகள் இனி 11 குறிப்பிட்ட ‘கார்டியன்’ மருந்துக்கடைகள் மூலம் மருந்துகளைப் பெற முடியும்.
கடந்த மாதம் சோதித்துப் பார்க்கப்பட்ட இந்தத் திட்டம், நோயாளிகள் தங்களுக்கான மருந்துகளைப் பெற கூடுதல் தெரிவுகளை வழங்குகிறது என்று எஸ்ஜிஎச் ஓர் அறிக்கை வழியாக இன்று (நவம்பர் 26) தெரிவித்தது.
நோயாளிகள் தங்களுக்கான மருந்துகளைப் பெற, மருந்துப் பரிந்துரைச் சீட்டை நேரடியாக அல்லது கைபேசிச் செயலி மூலமாக கார்டியன் மருந்தாளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தங்களது மருந்துகள் தீர்ந்து போவதற்குக் குறைந்தது மூன்று நாள்களுக்கு முன் அவர்களை இதைச் செய்ய வேண்டும்.
பின்னர் நோயாளிகள் சார்பாக அந்த மருந்தாளுநர் மருந்துக் கோரிக்கையை விடுத்து, அவர்கள் எந்த நாளில், எந்த நேரத்தில் வந்து மருந்துகளைப் பெற்றுச் செல்வர் என்பதையும் குறித்துக் கொள்வார்.
குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டிய, கட்டுப்படுத்தப்பட்ட, பெரிய அளவிலான மற்றும் உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளைத் தவிர மற்ற அனைத்து மருந்துகளையும் அந்தக் குறிப்பிட்ட கார்டியன் மருந்துக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
மருந்துகளை நேரடியாகத் தங்கள் வீடுகளுக்கே விநியோகிக்குமாறும் நோயாளிகள் கோரலாம்.
கொவிட்-19 நோய்ப் பரவலை அடுத்து மருத்துவரிடம் மெய்நிகர் முறையில் ஆலோசனை பெறுவது அதிகரித்து இருப்பதால், மாதத்திற்கு 2,500ஆக இருந்த மருந்து விநியோகக் கோரிக்கைகள் இப்போது 23,000ஆக உயர்ந்துவிட்டதாக எஸ்ஜிஎச் மருந்தகப் பிரிவு குறிப்பிட்டது.