இன்றைய மக்கள் உடனுக்குடனும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட வகையிலும் கூடிய மின்னிலக்கச் சேவைகள் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனியார் துறைகளில் காணப்படும் சிறந்த தீர்வுகளைக் கைக்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறி இருக்கிறார்.
இதன்மூலம் பொதுத்துறைக்குத் தங்களது சேவைகளை விற்க விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் ‘மேற்கோள் வாடிக்கையாளராக’ அமைந்து, அவற்றுக்கு அதிக வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.
‘GovTech’ எனும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த ‘ஸ்டேக் 2020 மேம்பாட்டாளர்’ கருத்தரங்கில் டாக்டர் விவியன் கலந்துகொண்டு பேசினார்.
சொல்-செயல் என இரு வழிகளிலும் பொதுத்துறை-தனியார் துறை ஒத்துழைப்பை வளர்க்க அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதற்குச் சான்றாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரு திட்டங்களைச் சுட்டிக்காட்டினார்.
“கிளவுட் தொழில்நுட்பம் தொடர்பில் அமேசான் இணையச் சேவைகள், மைக்ரோசாஃப்ர் அஸுர், கூகல் கிளவுட் தளம் ஆகிய மூன்று முன்னணிச் சேவை வழங்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் சில தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வணிக ‘கிளவுட்’ சேவைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடங்கும் என்று கடந்த 2018ஆம் ஆண்டில் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, வரி நிர்வாகம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ‘கிளவுட்’ சேவைக்கு மாற்றப்பட்டுவிட்டன.
வெளியுறவு அமைச்சருமான டாக்டர் விவியன், இவ்வாண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிங்கப்பூர் அரசாங்க மேம்பாட்டாளர் இணையவாயில்’ குறித்தும் பேசினார்.
அந்தத் தளம், அரசாங்கத்தின் தொழில்நுட்பத் தீர்வுகள் முக்கிய தகவல்களை மென்பொருள் மேம்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றை அவர்கள் தங்களது சொந்த செயலிகளிலும் ஒருங்கிணைத்து, மேம்படுத்தலாம்.
“அந்தத் தீர்வுகளைப் பயன்படுத்தி, உங்களது மின்னிலக்கத் தயாரிப்புகளை உருவாக்கவும் சோதித்துப் பார்க்கவும் மேம்படுத்தவும் முடியும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்,” என்று மென்பொருள் மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
“ஏனெனில், அது வேலைசெய்யும் பட்சத்தில், எங்களது சேவைகளிலும் அவற்றை ஒருங்கிணைக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.
கருத்தரங்கில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின்போது, அந்தத் தளத்தில் இடம்பெறும் மேம்பாடுகளில் பிரதமரும் தாமும் அதிக ஆர்வம் செலுத்துவதாகவும் அவர் சொன்னார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் முறையாக இடம்பெற்ற ‘ஸ்டேக்’ கருத்தரங்கு, இம்முறை மெய்நிகர் வழியில் நடத்தப்படுகிறது. அந்த இருநாள் கருத்தரங்கு இன்றுடன் முடிவடைகிறது.