தன்னுடைய முன்னாள் காதலரின் மரணம் தொடர்பில் அல்வெர்னா செர் ஷியூ பின், 38, மீது இன்று (டிசம்பர் 3) குற்றம் சாட்டப்பட்டது.
காணொளி வழியாக நீதிமன்றத்தில் முன்னிலையான செர், கொலை எனக் கருதப்படாத மரணம் விளைவித்த குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
இரு மகள்களின் ஒற்றைப் பெற்றோரான தாம் ஒருவரே குடும்பத்தில் வருமானம் ஈட்டுவதாகவும் பெற்றோரையும் தானே பார்த்துக்கொள்வதாகவும் செர் நீதிமன்றத்தில் கூறினார்.
‘சிட்டி ஃபியூனரல் சிங்கப்பூர்’ எனும் நிறுவனத்தில் செர் ஈமச்சடங்கு இயக்குநராக இருக்கிறார்.
இவ்வாண்டு மே 16ஆம் தேதி பிற்பகல் 1.44 முதல் 5.15 மணிக்கு இடையே, புளோக் 145ஏ பிடோக் ரெசர்வோர் சாலை எனும் முகவரியில் அமைந்துள்ள அடுக்குமாடி கார் நிறுத்தப் பூங்காவில் வீ ஜுன் ஸியாங், 32, எனும் ஆடவருக்கு நோக்கமில்லா மரணம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
பின் அதே நாள் மாலை 5.30 மணியளவில் அந்த கார் நிறுத்தப் பூங்காவில் ஸியாங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையின்போது செர் மீது ஐயம் எழ, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கொலை எனக் கருதப்படாத மரணம் விளைவித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால், செர்ருக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.