ஜெர்மனியின் பான் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் உலக தளவாடப் போக்குவரத்து நிறுவனமான ‘டிஎச்எல் குழுமம்’ சிங்கப்பூரில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்புகளில் இருந்து உலகளாவிய அளவில் பொருளியல் மீட்சி கண்டு வரும் நிலையில், பொருட்கள் பட்டுவாடாவும் சரக்குகள் அனுப்பப்படுவதும் ஏற்கெனவே அதிகரித்துள்ளதாக டிஎச்எல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் பியர்சன், டிஎச்எல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்தஃபர் ஓங் இருவரும் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டிஎச்எல் நிறுவனத்தின் தளவாடப் போக்குவரத்துக்கான ஆசியப் பசிபிக் வட்டார தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்து இருக்கிறது.
புதிதாக வேலையில் சேர்க்கப்பட்டு இருப்போரில் பெரும்பாலானவர்கள் முன்களப் பணியாளர்கள் என்று திரு ஓங் கூறினார்.
விற்பனைக்காக நான்கு தற்காலிக ஊழியர்களை அமர்த்தி இருக்கும் இந்த நிறுவனம், புதிய பட்டதாரிகள் 12 பேரைச் சேர்த்து பயிற்சி அளித்து வருகிறது.
மக்கள் பயணம் செய்ய இயலவில்லை என்பதால் இணைய விநியோக வழிகள் மூலமாக ஏராளமான பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கொவிட்-19க்கான மருந்தும் பல இடங்களுக்கும் அனுப்பப்பட வேண்டி இருக்கும். இதனால் அடுத்த ஆண்டில் மேலும் பல ஊழியர்கள் தேவைப்படக்கூடும் என்று திரு பியர்சன் தெரிவித்தார்.
இதனிடையே, கொவிட்-19 பாதிப்புகள், உலக வர்த்தகம், மூலதனங்கள், பொருளியல் இறங்குமுகம் முதலானவை இருந்தபோதிலும் உலகிலேயே மிகப் பெரிய பரந்த அளவிலான இணைப்புக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பெற்று இருக்கிறது.
‘டிஎச்எல் உலக இணைப்புப் பட்டியல்’ என்ற ஓர் அறிக்கையின் 2020வது பதிப்பு இவ்வாறு தெரிவிக்கிறது. நெதர்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. சிங்கப்பூருக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இரண்டே இரண்டு புள்ளிகள்தான் வித்தியாசம்.
சிங்கப்பூரின் உள்நாட்டுப் பொருளியலை ஒப்பிடுகையில், சரக்கு, மூலதனம், தகவல், மக்கள் ஆகியவை தொடர்பான அனைத்துலக புழக்கங்களின் அளவைப் பொறுத்த வரை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது.
பெல்ஜியம், ஐக்கிய அரபு சிற்றரசுகள், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், பிரிட்டன், டென்மார்க், மால்டா ஆகியவை பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள நாடுகளாகும்.