பச்சை, மஞ்சள் நிறங்களில் தலைமுடி, புதுமையான நவீன ஆடைகள், வேடிக்கையான நடனம் என காட்சியளிக்க, தமது துடிதுடிப்பான நடையாலும் கலகலப்பான பேச்சாலும் சுற்றியிருப்பவரை ஈர்க்கிறார் சிங்கப்பூரின் வளர்ந்து வரும் ‘ஹிப் ஹாப்’ கலைஞரான 24 வயது யங் ராஜா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களை விரும்பிப் பார்க்கும் இவர், தீவிர ரஜினி ரசிகர். ‘அண்ணாமலை’, ‘படையப்பா’, ‘அருணாச்சலம்’ போன்ற படங்களைப் பார்த்து வளர்ந்த இவர், ரஜினிகாந்தைப்போல மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதையே தமது நோக்கமாகக் கொண்டுள்ளார். ரஜினி தமது ‘ஸ்டைல்’ மூலம் எப்படி உற்சாகம் ஊட்டுகிறாரோ அவ்வாறே இவரும் விறுவிறுப்பான பாடல்கள், அசைவுகள் வழி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.
தனது தனித்தன்மையான பாடல்கள் மூலம் தென்கிழக்காசியாவில் மட்டுமின்றி, நவீன இசைப்பாடகர்க ளுக்குப் போட்டியாக மேற்கு உலகிலும் பரிணமித்து வருகிறார் யங் ராஜா.
உலகெங்கும் பிரபலமான இவரது பாடல் வரிகளையும் சொல்லிசையையும் உருவாக்க தூண்டுகோலாக விளங்கியது இவரின் தமிழ் வேர். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1992ல் புலம்பெயர்ந்த யங் ராஜாவின் பெற்றோர் இந்திய பண்பாடு, கலாசாரத்தைத் தங்களது பிள்ளைகளிடம் ஆழப் பதித்துள்ளனர்.
யங் ராஜாவுக்கு தந்தை வைத்த பெயர் ரஜித் அஹமது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ரஜித் அஹமது தாம் சிறுவயதிலிருந்து பார்த்து ரசித்த விஷயங்கள், அனுபவங்களை மையமாகக் கொண்டு தமது பாடல் வரிகளை எழுதி வருகிறார்.
“வாழ்க்கை அனுபவங்களையும் உண்மையையும் பேசுவதுதான் ஹிப் ஹாப். வளரும் பருவத்தில் நாம் அனுபவித்தவை, வாழ்க்கைக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு அமைவதே ஹிப் ஹாப்,” என்று விளக்கிய யங் ராஜா, இரண்டாம் தலைமுறை சிங்கப்பூரராக தனது அனுபவங்களை தனது பாடல்களில் பதிவு செய்து வருகிறார்.
“எனது பாடல்கள் எனது தமிழ் அடையாளத்தை முக்கிய கருப்பொருளாக கொண்டுள்ளன. இதுவே எனது தனித்துவம்,” என்றார் யங் ராஜா.
யங் ராஜாவின் இசைப் பயணம் எதிர்பாராதவிதமாக தொடங்கியது. நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பதின்ம வயதில் பல நடிப்பு தேர்வுப் போட்டிகளுக்குச் சென்றதுடன் உள்ளூர் நாடகங்களிலும் நடித்தார். இவரது கனவுகளைமாற்றியமைத்தது ஒரு நிகழ்வு.
ஒரு முறை அவரது நண்பர் ஃபரிஸ், ஒரு ஃப்ரீஸ்டைல் சொல்லிசை காணொளியைத் தயாரித்து டுவிட்டரில் பதிவேற்றினார். அது சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பிரபலமானது. அந்த வெற்றியைப் பார்த்து யங் ராஜாவையும் ராப் காணொளியை தாயாரித்து டுவிட்டரில் பதிவேற்றம் செய்யத் தூண்டி னார் ஃபரிஸ். அப்போது யங் ராஜா எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை இந்த அளவிற்கு மாற்றும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிப்பை முடித்தபின் பெற்றோரின் விருப்பப்படி பட்டப்படிப்பைத் தொடர்வதா அல்லது தமக்குப் பிடித்த கலைத் துறையில் ஈடுபடுவதா என்னும் கேள்வி எழுந்தபோது குடும்ப நிதி நிலைமை, ஆர்வமின்மை போன்ற காரணங்களால் பட்டப்படிப்பு வேண்டாம் என்று முடிவு செய்த யங் ராஜாவிற்கு ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாக இருந்தது இவரது குடும்பம்.
இவரின் தந்தை திரு யூசுப் ராவுத்தர் ரஜித், சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்ற தமிழ் எழுத்தாளர். தமது பாடல்களுக்கான தமிழ் வார்த்தைகளை பெற்றோர், மூன்று சகோதரிகளுடன் கலந்தாலோசிக்கும் யங் ராஜா, ‘பூரி கேங்’ எனும் தமது முதல் பாடல் வரிகளை எழுதியபோது தமிழ் சொற்களைக் கோர்வையாகச் சேர்க்க தமது தாயார் உதவியதை நினைவுகூர்ந்தார்.
ஒன்பதாவது வயதில் சகோதரியின் ‘வாக்மேன்’ கருவி வழி இவ ருக்கு ஹிப் ஹாப் பாடல்கள் அறிமுகமானதிலிருந்து இவருக்கு அத் தகைய பாடல்கள் மீதான ஆர்வம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
பிறரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியும் பிறரை மகிழ்விக்கும் ஆற்றலும் ஹிப் ஹாப் இசைக்கு உண்டு என்பதை நம்பும் யங் ராஜா, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக உரையாட முடிவது தமது பலம் என்றார்.
“முழுக்க ஆங்கிலத்திலேயே சொல்லிசையை உருவாக்கினால் எனது பாடல்கள் இன்னும் பிரபலமாகும். ஏராளமான ரசிகர்களை எட்டும் என்றும் பலர் நினைக்கிறார்கள். ஆனால், முழுவதும் ஆங்கிலத்தில் ‘ராப்’ செய்து இப்போது இருப்பதைவிட 10 மடங்கு பிரபலமானாலும் அது எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தராது. அது நான் யார் என்பதையும் எனது அடையாளத்தையும் பிரதிபலிக்காது. தமிழைத் தவிர்த்தால் என் அடையாளத்தை இழந்து விடுவேன். அது நானாக இருக்கமாட்டேன்,” என்றார் யங் ராஜா.
இவரின் சொல்லிசை வரிகளும் ஆடத் தூண்டும் இசையும் ஒருபுறமிருக்க, இவரது இசைக் காணொளிகளின் காட்சிகளும் பலரும் ரசிக்கும் வண்ணம் அமைகின்றன. கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சிகள், பார்க்கும்பொழுதே உற்சாகமூட்டும் புதுமை யான நடனக் காட்சிகள், சிங்கப்பூரர்களுக்கு அறிமுகமான இடங்கள் என காணொளிக் காட்சிகள் பார்ப்பவர்களின் ரசனையைத் தூண்டும்.
புகழ், பெயர், பணம் எதுவும் யங் ராஜாவுக்கு நோக்கம் அல்ல. மக்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களுக்கு உந்துகோலாக விளங்க வேண்டும் என்பதே தமது இசைப் பயணத்தின் நோக்கம் என்கிறார் இவர்.