கொவிட்-19 சூழல் கடந்த ஆண்டு உணவு, பானத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், கடந்த மாதம் வியாபாரம் சூடுபிடித்ததாக உணவகங்கள் கூறியுள்ளன. 2019ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க, கடந்த டிசம்பர் மாதம் உணவகங்கள் கூடுதலான முன்பதிவுகளைப் பெற்றன.
வாடிக்கையாளர் நம்பிக்கை மேம்படுவதை இது பிரதிபலிப்பதாக உணவு, பானத் துறையினர் கூறுகின்றனர். மேலும், உணவு, பானத் துறையில் வாடிக்கையாளர்கள் அதிகம் செலவிட, ஆண்டிறுதிப் பயணத் திட்டங்கள் பாதிப்படைந்ததும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.
உணவு, பானத் துறையில் டிசம்பர் மாதத்திற்கான அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் இன்னும் கிடைக்காததால் வியாபாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
கொவிட்-19 சூழலால் உணவு, பானத் துறைக்கு சிரமமான காலகட்டம் ஏற்பட்டதன் காரணமாக சில உணவகங்கள் வாடிக்கையாளர் கூட்டத்தை ஈர்க்க கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ததாலும் ஆண்டு இறுதியில் வியாபாரம் சூடுபிடித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தத் துறையில் கடந்த செப்டம்பருடன் ஒப்புநோக்க அக்டோபரில் விற்பனை 5.6 விழுக்காடு அதிகரித்ததை அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டினாலும், முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க கடந்த அக்டோபரில் விற்பனை 23.5 விழுக்காடு சரிந்தது.
உணவகங்களுக்கு கூடுதலான வாடிக்கையாளர்கள் உணவு உண்ண வரும் வேளையில், அவர்களுக்குப் பாதுகாப்பான, ரசிக்கக்கூடிய அனுபவத்தை வழங்க உணவகங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆண்டிறுதியில் சூடுபிடித்த வியாபாரம், இவ்வாண்டு தொடக்கத்திலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சீனப் புத்தாண்டிற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்பதிவுகள் வரத் தொடங்கிவிட்டதாக சில உணவகங்கள் கூறியுள்ளன.