சிங்கப்பூரில் நேற்று (ஜனவரி 10) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். அவர்களில் பாதிக்கும் அதிகமானோர், அதாவது 24 பேர் இந்தியா, பங்ளாதேஷ், இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த 24 பேரில் ஐவர் இல்லப் பணிப்பெண்கள்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 40 பேருக்கு கிருமித்தொற்று அறிகுறி ஏதும் இருந்திருக்கவில்லை.
நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட மற்ற 18 பேரில் இருவர் சிங்கப்பூரர்கள், இருவர் நிரந்தரவாசிகள், 6 பேர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டையில் இருப்போர், நால்வர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர், ஒருவர் நீண்டகால வருகை அனுமதி உடையவர், ஒருவர் குறுகியகால வருகை அனுமதி உடையவர், மற்றும் இருவர் சிறப்பு வருகை அனுமதி உடையவர்கள்.
சிங்கப்பூரர்கள் இருவரும் மலேசியாவிலிருந்தும் நிரந்தரவாசிகள் இருவரும் இந்தியாவிலிருந்தும் திரும்பியவர்கள்.
சிறப்பு வருகை அனுமதியில் இருக்கும் இருவரும் மியன்மார் மற்றும் இந்தோனீசியாவிலிருந்து வந்த கப்பல்களில் வந்தவர்கள். கப்பலிலிருந்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதிக்குப் பிறகு நேற்றுதான் ஆக அதிகமாக வெளிநாட்டிலிருந்து வந்தோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.