கொவிட்-19 கொள்ளைநோய், சளிக்காய்ச்சல் உட்பட பல்வேறு கிருமிகளைக் கண்டுபிடிக்கக்கூடிய புதிய சோதனைக் கருவிக்கு சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையத்தின் தற்காலிக அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஏ*ஸ்டார் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, டான் டோக் செங் மருத்துவமனை, MiRXES எனும் உள்ளூர் மூலக்கூறு கண்டறியும் நிறுவனம் ஆகியவை கூட்டாக இந்த ‘Fortitude SARS-CoV-2’ மற்றும் ‘Flu A/B’ சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளன.
தற்போதுள்ள ‘Fortitude’ கருவி கொவிட்-19 கிருமியை மட்டும் கண் டறியக்கூடியது. அதனுடன் ‘பிசிஆர்’ எனப்படும் பல்படியத் தொடர்வினை பரிசோதனை மரபணு அம்சமும் சேர்க்கப்பட்டது.
இனி இந்த மேம்படுத்தப்பட்ட கருவி, A மற்றும் B வகை சளிக்காய்ச்சலையும் கண்டுபிடிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
இந்தக் கருவியின் மூலம் ஒருவர் சோதிக்கப்படும்போது, அவருக்கு கொவிட்-19 உள்ளதா அல்லது சளிக்காய்ச்சல் உள்ளதா என்பதை இரண்டு முடிவுகளைத் தெரிவிக்கும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட ஃபோர்டிட்டியுட் சோதனைக் கருவி உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விற்கப்பட்டுள்ளன.
அந்தக் கருவிகள் 13 உள்ளூர் மருத்துவமனைகளிலும் ஆய்வுக் கூடங்களிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் அவை அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள 40க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 8ஆம் தேதி சுகாதார அறிவியல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய ‘ஃபோர் டிட்டியுட்’ சோதனைக் கருவியின் விற்பனை தொடங்கியது.
கொவிட்-19 அல்லது சளிக்காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்குள்ளிருந்து ஒரே மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும்.
அதனால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் சிரமப்படுவார்கள். இந்தப் புதிய கருவி அந்தச் சிரமத்தைப் போக்கி தெளிவான முடிவைக் காட்டும்.
MiRXES நிறுவனம் புதிய கருவிக்கு ஐரோப்பிய ஒப்புதலையும் பெற்றுவிட்டது. மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அங்கீகாரத்தையும் ஜப்பானின் மருந்தியல், மருத்துவச் சாதனங்கள் அமைப்பிடமிருந்து ஒப்புதலையும் பெற விண்ணப்பித்துள்ளது.
“உலகம் முழுவதும் ‘MiRXES Fortitude’ கருவி விநியோகிப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, தொற்றுநோய் சோதனையில் உலகத்தின் தேவையைக் கண்டறிய நாங்கள் முயற்சி செய்வோம்,” என்றார் MiRXES நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகி அதிகாரியுமான டாக்டர் லிஹான் ஸோ.
“ஏ*ஸ்டார், டான் டோக் செங் மருத்துவமனை போன்ற முக்கிய பங்காளிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி ‘ஃபோர்டிட்டியுட்’ சோதனைக் கருவியின் ஆற்றலை மேம்படுத்தி, பரிசோதனையின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம்,” என்றும் கூறினார் டாக்டர் ஸோ.