கூந்தலுக்கு சாயம் பூசுவதற்காக சிகை அலங்காரக் கடைக்குச் சென்ற ஒருவருக்கு அந்த நடைமுறையின்போது கூந்தல் கொத்துக் கொத்தாக உதிர்ந்தது மிகுந்த அதிர்ச்சி அளித்தது. தலையின் மத்திய பகுதியில் முடி உதிர்ந்து சொட்டை விழுந்தது அவரை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்து கெலஸ்டின் கீ எனும் அந்த மாது வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு சுமார் 4,500 முறை பகிரப்பட்டதுடன் அதற்கு 700 கருத்துகளும் பதிவிடப்பட்டுள்ளன.
ஜூரோங் வெஸ்டில் இருக்கும் K A Hair Salon கடைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி கூந்தலை நேர்ப்படுத்தி, சாயம்ம் பூசச் சென்றிருந்தார் செலஸ்டின்.
மூன்றாவது முறையாக அந்த சலூனுக்கு அப்போது அவர் சென்றிருந்தார்.
வண்ணம் பூசும் நடைமுறையின் தொடக்கத்தில் வேதிப்பொருள் ஒன்று தலையில் தடவப்பட்டதும் தலையில் அரிப்பு, உறுத்தல் தோன்றினாலும் கெலஸ்டின் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
கூந்தலுக்கான சிகிச்சை முறை தொடர்ந்தது.
அப்போது சிகிச்சை செய்தவர் கெலஸ்டினின் கூந்தலைச் சீவியபோது கெலஸ்டினின் கூந்தல் கொத்துக் கொத்தாக கையோடு வந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தலையின் மேல் பகுதியில் பெரிய சொட்டை விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தார் கெலஸ்டின்.
இந்த சிகிச்சையின்போதுதான் தலையில் சொட்டை விழுந்ததா என்று தெரியவில்லை எனவும் ரசாயனத்தை தலையில் போட்டபோது சரியாக கவனிக்கவில்லை எனவும் கூந்தலுக்கு வண்ணம் பூசியவர் குறிப்பிட்டதாகவும், சொட்டை பெரியதாக இருந்ததால், அது முன்பே இருந்திருந்தால் வண்ணம் பூசுபவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என திருப்பிக் கூறியதாகவும் கெலஸ்டின் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அந்த முடி திருத்துபவர் குறிப்பிட்டபோதும், வேறு இடத்தில் மாற்று கருத்து கேட்க வேண்டி கெலஸ்டின் அங்கிருந்து உடனே அகன்றார்.
கூந்தல் பெருமளவு உதிர்ந்த நிலையில், தலைமுடியை முற்றிலும் மழிக்க முடிவு செய்தார்.
அதனையடுத்து, முடி வளர்வதற்கான சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்து, தன்னுடைய இழப்புக்கு ஈட்டுத் தொகை கேட்க K A Hair Salon கடைக்குச் சென்றார் கெலஸ்டின்.
சிகிச்சைக்கு சுமார் $10,000 செலவாகும் என்றும் குறைந்தபட்சம் $6,000 வரை அந்த சலூன் தனக்கு இழப்பீடாக தந்தால் போதும் என்று சலூனிடம் கெலஸ்டின் கேட்டாராம்.
ஆனால், இழப்பீட்டுத் தொகையைக் குறைத்துக்கொள்ள முடியுமா என்று சலூன் கெலஸ்டினிடம் கேட்டதாக ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது. மேலும் சிகிச்சைக்கான கட்டணம் எவ்வளவாகும் என்ற விவரத்தை சேகரிக்குமாறு சலூன் உரிமையாளர் கெலஸ்டினிடம் கோரினார்.
இப்போது தலைவாரும்போதுகூட அவரது முடி பெருமளவு கொட்டுவதாகக் குறிப்பிட்ட கெலஸ்டின், வெளியில் செல்லும்போது தலையில் ஏற்பட்ட சொட்டையை மறைக்க பெரும்பாடுபடுவதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இம்மாதம் 15ஆம் தேதி தலை முடி கொட்டியதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது என அந்த சலூன் கடை சார்பில் வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து கடிதத்தைப் பெற்றிருக்கிறார் கெலஸ்டின்.
இது குறித்து சீன நாளிதழான சாவ் பாவ் அந்த சலூனை அணுகியபோது, வழக்கறிஞர் ஒருவர் இதனைக் கையாளுவதாகவும் அதன் தொடர்பில் ஏதும் கூற விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.