சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று நோயைச் சமாளிப்பதற்காக பல அமைச்சுகளை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழு செயல்பட்டு வருகிறது. சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் அதற்குத் தலைமை ஏற்று இருக்கிறார்கள்.
சிங்கப்பூர் கொவிட்-19 தலைகாட்டி ஓராண்டு ஆகிவிட்டது. அதைக் குறிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டம் நடந்தது.
கடந்த ஓராண்டில் இத்தலை வர்களில் ஒருவர் மற்றொருவரைப் பற்றிய கண்ணோட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இருவரும் பதிலளித்தனர்.
“திரு லாரன்ஸ் வோங், 48, திட்டவட்டமான ஒருவர். அவர் பிரச்சினைகளை எழுப்பி அவற்றை விவாதித்து முடிவுகளை எடுக்கும் விதத்தை நான் கவனித்து இருக்கிறேன். எல்லாம் தெளிவானதும் வேறு எதையும் யோசிக்காமல் செயலில் இறங்கி செய்து முடிப்போம்,” என்று திரு கான், 61, கூறினார்.
“திரு கான் மாபெரும் மதியுரைஞர். என்னுடைய அவசரத் தொடர்பு தொலைபேசி இணைப்பில் அவர் இடம்பெற்று இருக்கிறார்.
“எப்போதுமே அவரை அழைத்து தொல்லை கொடுப்பேன். காரணம் நான் சுகாதாரத்துறைக்குப் புதிதாக வந்திருக்கிறேன்,” என்று சுகாதார அமைச்சரரைப் பற்றி திரு வோங் குறிப்பிட்டார்.
“கொவிட்-19க்கு முன்பே பல வழிகளிலும் கான் கிம் யோங்குடன் தான் சேர்ந்து செயல்பட்டு வந்திருப்பதாக திரு வோங் கூறினார்.
மக்கள் செயல் கட்சியின் சமூக அறநிறுவன நிர்வாக மன்றத் தலைவராக திரு கான் செயலாற்றி வந்தார். அந்தப் பொறுப்பை 2015ல் திரு வோங் ஏற்றார்.
அதேபோல, சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனத்தின் தலைவராக 2018ல் திரு வோங் பொறுப்பெடுத்துக்கொண்டார்.
இந்த இரண்டு பதவிகளிலும் திரு வோங்கிற்குத் திரு கான் வழிகாட்டி உதவினார்.
“திரு கான் சுகாதார அமைச்சுக்குப் பொறுப்பு வகிப்பவர். ஆனால் தான் அப்படி அல்ல என்பதால் சிறப்பு பணிக்குழுவுக்குத் தலைமை வகிக்கும் ஒருவர் என்ற முறையில் பலவற்றையும் புதிய கண்ணோட்டத்தில் சிந்திப்பதும் எனது பணியின் ஒரு பகுதி. அப்போதைக்கு அப்போது திரு கானை அழைப்பேன். இருவரும் பலவற்றையும் சிந்தித்து பல யோசனைகளை முன்வைத்து விவாதிப்போம்.
“திரு கான் எப்போதுமே ஒளிவுமறைவு இல்லாதவர். சிறந்த முறையில் நிலவரங்களைத் தெரிந்துகொள்ள, சுகாதார அமைச்சின் எண்ணங்கள் என்ன என்பதை நான் தெரிந்துகொள்ள எனக்கு உதவுபவர். நாங்கள் இருவரும் பலவற்றையும் அலசி ஆராய்ந்து ஒன்றாகச் சேர்ந்து தீர்வுகளை உருவாக்கி வந்துள்ளோம்,” என்று திரு வோங் மேலும் கூறினார்.
பணிக்குழுவைப் பொறுத்த வரையில் மிகவும் திட்டவட்டமான இணைத் தலைவர் ஒருவருடன் சேர்ந்து செயல்படுவது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாக திரு கான் குறிப்பிட்டார்.