செங்காங் வட்டாரத்தில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்த பேருந்துப் பயணிகள் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ரிவர்வேல் லேனை நோக்கிச் செல்லும் கம்பஸ்வேல் டிரைவில் ஒரு எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து, மூன்று கார்கள், ஒரு லாரி மோதிக்கொண்டன.
இந்த விபத்து குறித்து காலை 6.58 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. இந்த விபத்தில் காயமடைந்த 37 வயது பெண், 7 வயது சிறுமி ஆகிய பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் கூறியது.
இந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
அந்த காரின் பின்பகுதி மீது அந்தப் பேருந்து மோதும் காட்சி காணொளியில் பதிவானது.
இதன் விளைவாக முன்னால் இருந்த லாரி மீது அந்த கார் இலேசாக மோதியது. இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.