ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி உறுப்பினரும் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திருவாட்டி சிம் ஆனிடம் இரண்டரை வாரங்களுக்கு முன்னர் ஒரு குடியிருப்பாளர், அந்த வட்டாரத்தில் சீனப் புத்தாண்டு அலங்காரம் உண்டா என்று கேட்டார்.
அத்தகைய திட்டமோ அல்லது அதற்கான நிதி ஒதுக்கீடோ இல்லை என்று சிம் ஆன் கூறவும் அந்த குடியிருப்பாளர் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார்.
தொண்டூழியர்களுடன் கலந்துபேசிய பிறகு, வரலாற்றச் சிறப்புமிக்க புக்கிட் தீமா டிரஸ் பாலத்தை மறுசுழற்சிப் பொருட்களால் அலங்கரிக்க அவர் முடிவெடித்தார். அடித்தள அமைப்புகளின் தொண்டூழியர்கள் உட்பட ஏறக்குறைய 100 குடியிருப்பாளர்கள் ஒன்று கூடினர். 10 நாட்களில், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு 500 பூக்களையும், பயன்படுத்திய பாட்டில்களிலிருந்து 100 விளக்குகளையும் உருவாக்கினர். ஏறக்குறைய 200 பூக்கள், 60 முதல் 70 விளக்குகளால் புக்கிட் தீமா டிரஸ் பாலம் புதுக்கோலம் பூண்டது. விளக்குகளில் அன்பளிப்புப் பைகளுடன் முகக்கவசங்களும் அழகாகத் தொங்குகின்றன.
மீதமுள்ள அலங்காரங்கள் அக்கம்பக்க சமூக நிலையங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும்.
சுற்றுப்புறத்துக்கு கேடில்லாமல், நீடித்த நிலைத்தன்மை பற்றிய செய்தியைப் பரப்பும் வகையில் விழாக்களைக் கொண்டாட இது சிறந்த வழி என்றார் திருவாட்டி சிம் ஆன்.
கொரோனா சூழலுக்கு ஏற்ப சிங்கப்பூரர்கள் எவ்வாறு தங்களை மாற்றியமைத்துக்கொள்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது என்றார் நேற்றைய அலங்கார நிகழ்ச்சிக்கு வந்த தொகுதியின் மற்றோர் உறுப்பினர் கிறிஸ்தோபர் டி சூசா.