துரித மாற்றங்களுடன் நிலைத்தன்மைக்கு வழி

துரித மாற்றங்களுடன் நிலைத்தன்மைக்கு வழி

3 mins read
503bfe98-3e57-436d-b038-24ce96a96ae8
நந்தனாஸ் உணவக உரிமையாளர் திரு சிவவடிவேல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எண்ணற்ற இந்திய உணவகங்களில் உணவை சுவைத்துப் பார்த்திருக்கும் 43 வயது திரு ரா. சிவவடிவேல் (படம்), தாமாகவே ஓர் இந்திய உணவகத்தைத் திறந்து, உயர்தர உணவை வழங்க வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைத்திருந்தார்.

தம் மகளின் பெயரை மையமாகக்கொண்டு 'நந்தனாஸ்' உணவகத்தை ஜூ குன் பகுதியில் அவர் 2019ஆம் ஆண்டில் திறக்கவும் செய்தார்.தொழிற்சாலை பகுதி என்பதால் முதலில் வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருந்தது. ஆனால் நாளடைவில், உணவகத்தைப் பற்றி பலருக்கும் தெரியவர, வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடியது.

உணவகம் பிரபலமடைய வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு ஆர்டர்களும் வந்து குவிந்தது. இந்த நல்ல வரவேற்பில், மற்றோர் உணவகக் கிளையை ஈஸ்ட் பாயிண்ட் கடைத்தொகுதியில் கடந்தாண்டு தொடக்கத்தில் திறந்தார் திரு சிவவடிவேல். உணவகத்தைத் திறந்ததும், அங்கு உண்ணவே வரிசையில் காத்திருக்க வேண்டும் என்ற அமோக வரவேற்பு. ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. நேர்மறையான தொடக்கத்திலிருந்து எதிர்மறையான தாக்கம் கொவிட்-19 கிருமித்தொற்று ரூபத்தில் வந்தது.

கொவிட்-19 கிருமித்தொற்று கொண்டவர் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் ஈஸ்ட்பாயிண்ட் கடைத்தொகுதிக்கு வந்துள்ளார் என்ற செய்தி பரவ, மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். "சீனப் பெருநாளுக்கு முன்தினம் ஏற்கெனவே உணவகத்தில் உண்ண முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் கடைசி நிமிடத்தில் மனதை மாற்றிக்கொண்டனர். அதனை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சில வீட்டு 'கேட்டரிங்' ஆடர்களும் ரத்தாகின.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடப்பில் வந்த கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்புத் திட்டம் நம்பிக்கையை முறியடித்தது.நாளுக்கு சராசரியாக $200 மதிப்புள்ள உணவை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களின் தயவில் ஈஸ்ட் பாயிண்ட் கடைத்தொகுதியில் உணவகத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை.

எதிர்பாராதது நடந்தது குறித்த பதற்றம் ஆனால் உடனே எதையாவது செய்ய வேண்டும் என்ற காலத்தின் கட்டாயம். அத்தருணம் உணவகங்கள் பெரும்பாலும் உணவு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களையும் வீட்டுக்கு உணவு விநியோகம் செய்யும் சேவையையும் நம்பியிருக்க, தம் உணவகத்தின் உணவு விநியோகம் செய்யும் பணிக்கு ஆள் எடுப்பதற்கு சிரமப்பட்டார்.

இடையில் 'கிராப்' உணவு விநியோகச் சேவையில் சேர்ந்ததில் ஏதோ கொஞ்சமாவது விற்பனை வர ஆரம்பித்தது. அரசாங்கத்தின் ஊழியர்களுக்கான சம்பள ஆதரவு திட்டம் இவரது ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள உதவியது. உணவகத்தின் மின்வர்த்தகச் செயல்முறையை அவர் மேம்படுத்தினார். உணவு விரயத்தை கட்டுப்படுத்த குறைந்த எண்ணிக்கையில் உணவு சமைக்கப்பட்டது.

சமூக ஊடக, ஒளிவழி விளம்பரங்களில் இன்னும் கூடுதலான வாடிக்கையாளர்களை சென்றடைந்திட முனைந்தார். கடந்தாண்டு ஜூன் மாதத்தின் இரண்டாம் கட்ட கொவிட்-19 தளர்வுகளில் முன்னிட்டு விடிவுகாலம் பிறந்தது.

உணவகத்தில் உண்ண வாடிக்கையாளர்களுக்கு அனுமதி கிடைக்க, வழக்கமான வாடிக்கையாளர்கள் மீண்டும் திரும்பினர். ந‌ட்டத்தை சில மாதங்களாக அனுபவித்தாலும் தற்போது படிபடியாக வியாபாரம் மேம்பட்டு வருகிறது.

"சில உணவகங்கள் கடந்தாண்டு பருவத்தில் மூடினாலும் இந்த நிலைமை தற்காலிகமே என்று நினைத்து மீள்திறனோடு செயல்பட்டதில் பலனை கண்டோம். எங்களது எல்லா உணவகங்களுக்கும் உணவு வழங்கும் மத்திய சமையல் வசதியை அமைத்து, புதிய உணவக கிளையை தொடங்கலாம் என்ற எண்ணம் கொண்டுள்ளேன். கொவிட்-19 நிலவரம் கட்டுக்குள் இருந்தால் அது சாத்தியமாகும்," என்று தெரிவித்தார் திரு சிவவடிவேல்.