சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் பலியான 18 பாதசாரிகளில் 15 (83%) பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
அதற்கு முந்தைய ஆண்டில் இந்த விகிதம் 70% ஆக இருந்தது.
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்த பாதசாரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் சாலையைக் கடப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள இடமில்லாமல் மற்ற இடங்களில் சாலையைக் கடந்தவர்கள் என இன்று (பிப்ரவரி 10) வெளியான வருடாந்திர சாலைப் போக்குவரத்து சூழல் அறிக்கை தெரிவிக்கிறது.
கொவிட்-19 சூழல் காரணமாக கடந்த ஆண்டில் சாலைப் போக்குவரத்து மந்தமாக இருந்ததால், ஒட்டுமொத்த போக்குவரத்து விபத்துகள் குறைந்திருந்தன.
கடந்த ஆண்டில் மொத்தம் 85 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். 2019ஆம் ஆண்டில் 118 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கையில் 28% சரிவு பதிவானது.
காயம் விளைவிக்கக்கூடிய விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் 29% குறைந்து 5,473ஆக அது பதிவானது.
ஆயினும், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வேகமாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் விபத்துகளும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்தன.
மோட்டார்சைக்கிளோட்டிகளுடன் தொடர்புடைய விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அக்கறைக்குரிய அம்சமாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டிலான மொத்த விபத்துகளில் அவற்றின் எண்ணிக்கை 63%.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, விபத்துக்குள்ளாவதும் கடந்தாண்டில் குறைந்தது. 2019 உடன் ஒப்பிடுகையில் அது 24.2% குறைந்து 1,507 ஆனது.
ஆயினும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது. அதற்கு முந்தைய ஆண்டில் அது 7 ஆக இருந்தது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதன் தொடர்பிலான விபத்தில் கடும் காயமோ அல்லது மரணமோ நிகழ்ந்தால் விபத்தை நிகழ்த்தியவருக்கு சிறைத் தண்டனை அல்லது வாகனம் ஓட்டுவதிலிருந்து விலக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.