உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மனச்சோர்வு, மனஉளைச்சல் போன்றவற்றின் அறிகுறிகளை அறிந்து அவற்றைப் போக்குவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு மனநல பாடப் போதனை உதவுகிறது.
புதுப்பிக்கப்பட்ட அறநெறி மற்றும் குடியுரிமை பாடத்திட்டத்தில் மனநலக் கல்வி சேர்க்கப்பட்டு இருக்கிறது. அது இந்த ஆண்டில் இருந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.
சக மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கிக்கொள்வதில் அந்தப் பாடத்திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது.
கல்வி அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் பற்றி சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களின்போது மனநலப் பாடப் போதனை திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டன.
சிராங்கூன் உயர்நிலைப் பள்ளியில் அந்தப் பாடப் போதனையை நேரே கண்டறிவதற்காக நேற்று ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பாடச்சுமை, எதிர்மறையான எண்ணங்கள் போன்ற பல்வேறு மனநெருக்குதல்களை எதிர்கொள்ளும் பதின்ம வயது மாணவ, மாணவிகளைக் காட்டும் காணொளிகளை வகுப்பின்போது மாணவர்கள் பார்த்தார்கள்.
அவற்றைச் சமாளிப்பதற்கான பல்வேறு உத்திகளையும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.
மனஉளைச்சலை எப்படி அடையாளம் காணலாம் என்பதையும் அத்தகைய சூழல்களில் எப்படி உதவி நாட முடியும் என்பதையும் ‘பேட்லெட்’ என்ற மின்னிலக்கச் செயலியைப் பயன்படுத்தி அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.
சக மாணவர் உதவித்திட்டப் பயிற்சியை சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி சென்ற ஆண்டு தொடங்கியது. இப்போது அந்தப் பள்ளிக்கூடம் முழுவதும் 26 சக மாணவர் ஆதரவு தலைவர்களாக இருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் வகுப்புக்கு இருவர் என்ற அளவுக்கு அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் உள்ளது.
கல்வித் துணை அமைச்சர் சுன் சூலிங் நேற்றைய பாடப் போதனையைக் கண்காணித்தார்.
பள்ளிக்கூடங்களில் மனநலனில் ஒருமித்த கவனம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. கொவிட்-19 சூழலில் இது பொருத்தமானதாக இருக்கிறது என்றார் அமைச்சர்.
மனஉளைச்சல் போன்றவை உண்மையிலேயே வழக்கமானவைதான் என்பதை உணர்ந்துகொண்டு அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நண்பர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்களுடன் தாங்கள் பேசமுடியும் என்பதை அறநெறி மற்றும் குடியுரிமை பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்துகொள்கிறார்கள் என்றும் திருவாட்டி சுன் சூலிங் குறிப்பிட்டார்.
இந்தப் பாடத்திட்ட ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் மாணவர்களின் நண்பர்களாகச் செயல்பட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி மாணவர்களுக்கு ஊக்கமூட்டுகிறார்கள் என்று கூறிய அமைச்சர், தான் இதைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.