தமது சிறு வயதில் அம்மை நோய்க்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட 78 வயது திரு டான் ஹோங் சான், அன்றிலிருந்து நோய்த் தொற்றிலிருந்தும் நோய்களிலிருந்தும் தடுப்பூசிகள் நம்மைப் பாதுகாக்கின்றன என்ற வலுவான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார்.
அந்த நம்பிக்கைதான், நேற்று செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றத்தில் இடம்பெற்ற மூத்தோருக்கான தடுப்பூசி போடும் நிகழ்வுக்கு அவரைத் துடிப்புடன் அழைத்து வந்தது.
“தடுப்பூசி போட்ட பிறகு இதயத் துடிப்பு சற்று அதிகமானது. ஆனால் சில நிமிடங்களில் அது வழக்கத்துக்குத் திரும்பி விட்டது. கொள்ளைநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம் என நான் கருதுகிறேன்,” என்றார் ஓய்வு பெற்ற அந்த முதியவர்.
சிங்கப்பூரில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நேற்று தொடங்கியது.
மூத்தோருக்கான தடுப்பூசி போடும் முதற்கட்ட நிகழ்வு ஜனவரி 27ஆம் தேதி தஞ்சோங் பகார், அங் மோ கியோ ஆகிய வட்டாரங்களில் தொடங்கப்பட்டது. அதில் 5,000க்கு மேற்பட்ட முதியோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
ஏற்கெனவே வேறு நோய்களின் பாதிப்புள்ள மூத்தோர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களின் நோய் மேலும் தீவிரமடைந்து அதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால், அந்தப் பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று புக்கிட் தீமா, மரின் பரேட், தாமான் ஜூரோங் ஆகிய வட்டாரங்களில் மூத்தோருக்கான தடுப்பூசி போடுதல் தொடரும்.
அவற்றுடன் சேர்த்து சிங்கப்பூரின் மொத்தம் 56 தடுப்பூசி போடும் நிலையங்கள் உள்ளன. அவற்றில் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள 14 நிலையங்கள், 20 பலதுறை மருந்தகங்கள், 22 பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்கள் ஆகியவை அடங்கும்.
அடுத்த மாத நடுப்பகுதிக்குள் 31 தடுப்பூசி மையங்கள் செயல்படும் என்றும் அவை ஒவ்வொரு வட்டாரத்திலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், கிட்டத்தட்ட 40 தடுப்பூசி மையங்கள் செயல்படும். அவை ஒவ்வொன்றும் நாள்தோறும் 2,000 தடுப்பூசி வரை போடும் ஆற்றல் பெற்றதாக இருக்கும்.
அனைத்து மூத்தோருக்கும் மார்ச் மாத நடுப்பகுதிக்குள் தடுப்பூசி போடப்பட்டுவிடும். அடுத்த மூன்று வாரங்களுக்குள் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள விண்ணப்பிக்கும் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும்.
பலதுறை மருந்தகங்கள் அல்லது தடுப்பூசி மையங்களுக்கு அருகில் வசிக்கும் மூத்தோருக்கு முதலில் அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும்.
60 வயது முதல் 69 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி போடுதல் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். அவர்கள் தங்கள் அழைப்புக் கடிதங்களை மார்ச் நடுப்பகுதி வாக்கில் பெறுவார்கள்.
செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றத்தில் செயல்படும் தடுப்பூசி நிலையத்தை தாம்சன் மருத்துவக் குழுமம் ஏற்று நடத்துகிறது. அக்குழுமம் பீஷான் சமூக மன்றத்தில் மற்றொரு நிலையத்தை நடத்துகிறது.
செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்தோர், தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிறகு தங்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவரான 78 வயது திரு செங் சூன் கியாங், “ஊசி போட்டுக்கொள்ளும்போது வலி ஏதும் இல்லை. அதன் பிறகு உடலில் எவ்விதக் கோளாறும் ஏற்படவில்லை. இரண்டாவது முறை தடுப்பூசி போட்டவுடன் கிருமித்தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு எனக்குக் கிடைத்துவிடும்,” என்றார்.
இம்மாதம் 18ஆம் தேதி வரை 250,000 பேர் தங்களது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
செய்தி: ஷபானா பேகம்