கொவிட்-19 விதிமீறல்: 4 உணவு, பானக் கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு; 234 பேருக்கு அபராதம்

கொவிட்-19 விதிமீறல்: 4 உணவு, பானக் கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு; 234 பேருக்கு அபராதம்

2 mins read
b2ef0122-54c1-46d7-8d09-f2ea8ea837ac
சீனப் புத்தாண்டின்போது அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இந்தக் கடைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்தது. படங்கள்: சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் -

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள கான்கோர்ட் கடைத்தொகுதியில் இயங்கும் 'கிளப் ஒன் மின்' மற்றும் 'ஜின் ஜின் ஈட்டிங் ஹவுஸ்' உணவகங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து நான்கு உணவகங்கள் கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மூடும்படி உத்தரவிடப்பட்டன.

சீனப் புத்தாண்டின்போது அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இந்தக் கடைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்தக் காலக்கட்டத்தில் மேலும் 13 உணவகங்களுக்குப் பாதுகாப்பு விதிமுறை மீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்காமல் பூங்கா, கடற்கரையென சுற்றித்திரிந்த 234 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு இன்று தெரிவித்தது.

கான்கோர்ட் கடைத்தொகுதியில் உள்ள 'ஒன்மின்' உணவகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி எட்டுப் பேருக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பு விதிமுறையை மீறி ஒன்றுகூடுவதற்கு அந்நிறுவனம் அனுமதியளித்திருந்ததாக அமைச்சு கூறியது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் இந்த உணவகத்தை பிப்ரவரி 20ஆம் தேதியில் இருந்து மார்ச் 11ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உணவகம் இதற்கு முன் டிசம்பர் 20ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 29ஆம் தேதி எட்டுப் பேருக்கும் அதிகமானோர் ஒன்றுகூட அனுமதித்ததற்காக மூடப்பட்டது.

உணவகங்களின் விதிமீறலை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாகவும் அந்த நிறுவனங்கள் குறித்து விசாரணை தொடர்வதாகவும் அமைச்சு தெரிவித்தது.

எஞ்சியுள்ள மூன்று உணவங்களுக்கும் 10 நாட்கள் மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளன.

இந்த உணவங்களில் இரவு 10.30 மணிக்குப் பிறகும் வாடிக்கையாளர்கள் மது அருந்திக்கொண்டிருந்தது சோதனையில் தெரியவந்தது.

பிடோக், ஃபுட் பார்க் காப்பிக் கடையில் உள்ள 8ஆம் எண் கடை பாதுகாப்பு விதிமீறலுக்காக பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது.

ஜூ சியாட்டில் செயல்படும் 'ஜின் ஜின் ஈட்டிங் ஹவுஸ்' மற்றும் '200 எச்சிஎம் ஃபுட்' ஆகிய உணவங்களும் விதிமீறலுக்காக பிப்ரவரி 23 முதல் மார்ச் 4 வரை மூடப்படுகிறது.

மேலும் ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள ‌ஷி லி ஃபாங், வாட்டர்வே பாய்ண்ட்டில் உள்ள 'ரொங் ஹுவா பாக் குத் தே', பாரகன் கடைத்தொகுதியில் 'பாசிர் தாய் கிச்சன்' ஆகிய உணவகங்களுக்குத் தலா $1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த உணவகங்களில் ஒரு மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.

பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பூங்காக்கள், கடற்கரைகளில் சுற்றித்திரிந்த 234 பேருக்கு தலா $300 அபராதம் விதிக்கப்பட்டது.

இவர்களில் பலர் எட்டு பேருக்கு மேலானவர்கள் ஒன்றுகூடியது, மற்ற குழுக்களுடன் கலந்து உறவாடியது போன்ற விதிமீறலில் ஈடுபட்டவர்கள்.

உணவகங்கள், சந்தை, பேரங்காடி மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட கூட்டநெரிசல் உள்ள இடங்களுக்கு உச்சநேரத்தில் செல்வது குறித்து பொதுமக்கள் நன்கு திட்டமிட வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்