ஜனநாயகமுறைக்குத் திரும்ப மியன்மாரில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.
“மியன்மார் அதிபர் வின் மியின்ட், வெளியுறவு அமைச்சர் ஆங் சான் சூச்சி உட்பட மற்ற அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மியன்மாரில் ஜனநாயகம் திரும்ப வாய்ப்பு ஏற்படும்,” என்று வெளியுறவு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவாதத்தின்போது டாக்டர் விவியன் கூறினார்.
ஆட்சி கவிழ்ப்பை எதிர்த்து மியன்மாரில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க மியன்மார் பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்த நேற்று குறைந்தது 18 பேர் மாண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி சுட்டனர்.
அதுட்டுமல்லாது, கையெறி குண்டுகளையும் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்கள் கலைக்க முயன்றனர்.
மியன்மார் பாதுகாப்புப் படையினரால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைக்கு அனைத்துலகச் சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
“பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறை அதிர்ச்சியை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம். பொதுமக்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவது எந்த நிலையிலும் மன்னிக்க முடியாதது,” என்று அமைச்சர் விவியன் தமது கண்டனத்தைப் பதிவு செய்தார்.