சிங்கப்பூருக்குள் பயணிகள் வருவதற்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற தகுதியை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
“அதற்கு மாறாக, சோதனைகளாலும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவுகளாலும் பயணிகள் கிருமித்தொற்றை நமது சமூகங்களுக்குள் கொண்டு வராமல் தொடர்ந்து கண்காணிப்போம்.
“தடுப்பூசி போடாத சில பயணிகள் கடந்த ஆண்டில் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள்,” என்றும் திரு ஓங் விவரித்தார்.
“தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்துவது பற்றி இப்போதைக்கு முடிவெடுக்க இயலாது. அத்துடன் வெவ்வேறு தடுப்பூசிகளுக்கு வெவ்வேறு கட்டுப்பாட்டுத் தளர்வுகளை அறிவிக்கவும் இயலாது.
“எந்தத் தடுப்பூசியால் ஒரு தனிநபர் மற்றவர்களுக்குக் கிருமியைப் பரப்பும் வாய்ப்பு குறைவு என்று சுகாதார அமைப்புகள் உறுதிசெய்ய, போதிய அறிவியல் தரவுச் சான்றுகள் இல்லை என்பதே அதற்குக் காரணம்.
“இருந்தாலும், நாடுகளுக்கு இடையில் தடுப்பூசி சான்றளிப்பை பரஸ்பர முறையில் அங்கீகரிக்கும் முறை பற்றி ஆராயப்படும். இதற்கிடையே, அழிக்க முடியாத, எளிதில் சரிபார்க்கக்கூடிய மின்னிலக்க தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தை சிங்கப்பூர் அமல்படுத்தி உள்ளது,” என்றும் அமைச்சர் ஓங் விளக்கினார்.
“இத்தகைய சான்றிதழ் அளிக்கும் பரஸ்பர அங்கீகாரத் திட்டம் பற்றி சிங்கப்பூர், அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்புடனும் பல்வேறு நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது.
“இத்தகைய பேச்சுவார்த்தைகளும் ஆலோசனைகளும் நிறைவுபெற சில காலம் பிடிக்கும்,” என்றார் திரு ஓங்.
இந்தப் புதிய மின்னிலக்கச் சான்றிதழ் முறை ‘ஹெல்த்செர்ட்ஸ்’ முறையைச் சார்ந்துள்ளது. அரசாங்க தொழில்நுட்ப அமைப்பும் சுகாதார அமைச்சும் இணைந்து கூட்டாக கொவிட்-19 சோதனை முடிவுகளைத் தெரிவிக்கும் மின்னிலக்கச் சான்றிதழ் அளிக்கும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.