போலிசாரிடம் அனுமதி பெறாமல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உணவு அங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு ஆதரவான வாசகம் உள்ள அட்டையை ஏந்தியது தொடர்பாக நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்கிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
ஈசூன் பார்க் உணவு அங்காடி நிலையத்துக்குச் சென்ற திரு இங், அங்கு தாம் உணவுக் கடைக்காரர்களுடன் நின்று எடுத்துக்கொண்ட படங்களைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்தார்.
உணவு அங்காடி நிலையத்தில் இருந்தபோது ‘இவர்களுக்கு ஆதரவு அளியுங்கள்’ என்று அங்குள்ள கடைக்காரர்களுக்கு ஆதரவான வாசகத்தைக் கொண்ட அட்டையை ஏந்தி அவர் படமெடுத்துக்கொண்டார்.
இந்தப் படத்தை அவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.
உணவு அங்காடி நிலையத்துக்குச் செல்ல குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் திரு இங் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அனுமதி பெறாமல் பொது இடத்தில் கூட்டம் கூட்டியது தொடர்பாக திரு இங்கிடம் விசாரணை நடத்தப்படுவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து போலிசார் தம்மிடம் வாக்குமூலம் கேட்டுள்ளதகாகவும் அவர்களிடம் தாம் விளக்கம் அளித்துள்ளதாகவும் திரு இங் தெரிவித்துள்ளார்.
அனுமதி இல்லாமல் பொது இடங்களில் கூட்டம் கூட்டுவோருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.