ஆட்குறைப்பு செய்யப்படும் அனைவரும் நிபுணர்கள், மேலாளர்கள்
'எக்ஸ்ஸோன்மோபில்' சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிக்குள் 300 ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிடுகிறது. சிங்கப்பூரில் அந்த நிறுவனத்தின் ஆகப் பெரிய சுத்திகரிப்பு ஆலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக எதிர்பாராத சந்தை சூழல்களால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அந்த நிறுவனம் நேற்று தெரிவித்தது. 300 ஊழியர்கள் என்பது இங்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிவோரில் கிட்டத்தட்ட 7%.
இந்த ஆட்குறைப்பால் பாதிக்கப்படுவோர் அனைவரும் நிபுணர்கள் மற்றும் மேலாளர்கள். அவர்கள் அனைவருக்கும் இம்மாதம் 8 முதல் 12ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும் என எக்ஸ்ஸோன்மோபில் சிங்கப்பூர் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சியூ பூன் ஜின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
ஆட்குறைப்புக்கு உட்படும் ஊழியர்கள் அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை பணியில் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்துலக அளவில் 15 விழுக்காட்டுப் பணியாளர்களை ஆட்
குறைப்பு செய்ய இருப்பதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் எக்ஸ்ஸோன்மோபில் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இந்த ஆட்குறைப்பு இடம்பெறுகிறது.
சிங்கப்பூரில் அமைந்துள்ள எக்ஸ்ஸோன்மோபில் நிறுவனத்தின் ஆகப் பெரிய ஒருங்கிணைந்த பெட்ரோ-ரசாயன வளாகத்தில் 4,000க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். அந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு 592,000 பீப்பாய் எண்ணெய்யை சுத்திகரிக்க முடியும்.
பெரிய அளவிலான உற்பத்தி வளாகம், திறன்மிகு ஊழியரணி இவற்றுடன் தங்களது நிறுவனத்தின் உத்திபூர்வ இருப்பிடமாக சிங்கப்பூர் தொடர்ந்து இருப்பதாக எக்ஸ்ஸோன்மோபிலின் அறிக்கை குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆலோசனை, வேறு வேலையில் சேர உதவி போன்ற ஆதரவை எக்ஸ்ஸோன்மோபில் வழங்குவதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மனிதவள அமைச்சு, சங்கத் தலைவர்கள் ஆகியோரிடம் அந்த நிறுவனம் இந்த அறிவிப்புக்கு முன்னரே கலந்து ஆலோசித்ததையும் பேச்சாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை ஏற்பாடுகள் செய்வதன் தொடர்பில் அந்த நிறுவனத்துடனும் இதர அரசாங்க முகவைகளுடனும் பொருளியல் மேம்பாட்டு வாரியம் இணைந்து செயல்படுவதாக வாரியத்தின் ஆற்றல் மற்றும் வளங்கள் துறையின் தலைவரான திரு லிம் வே லென் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான எக்ஸ்ஸோன் மோபில் இங்கு $25 பில்லியனுக்கும் அதிக நிலையான சொத்து களில் முதலீடு செய்திருக்கிறது.