கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் கடந்த ஆண்டில் மின்னிலக்க நூலகப் பயன்பாடு அதிகரித்தது. அதே வேளையில், நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடைமுறையில் இருந்தபோது நூலகங்கள் மூடப்பட்டதால் நூல்களை இரவல் பெற்றது குறைந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டில் 40.5 மில்லியனாக இருந்த இரவல் எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டில் 29.2 மில்லியனாகக் குறைந்தது.
தேசிய நூலக வாரியத்தின் மின்னிலக்க வளங்களைப் பயன்படுத்திய உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் சென்ற ஆண்டில் 46.5% கூடியதாக வாரியம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மின்னிலக்க முறையில் இரவல் பெறுவது 26.2% அதிகரித்தது. நூலக வாரியச் செயலி பதிவிறக்கம் ஒட்டுமொத்த அளவில் 36.5% கூடியது. அதேபோல, அதன் மின்னிலக்கத் தரவுகள் பயன்பாடும் 121% அதிகரித்தது.
பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுடன் கடந்த ஜூலையில் நூலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் புத்தக ஆர்வலர்கள் அங்கு குவியத் தொடங்கினர். ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அவர்கள் நூலகங்களுக்கு வந்து சென்றது 88.9% அதிகரித்தது. அதேபோல, அக்காலகட்டத்தில் நூல்கள் இரவல் பெறப்பட்டதும் 14.2% கூடியது.
ஒட்டுமொத்தத்தில், சென்ற ஆண்டில் பொது நூலகங்களுக்கும் சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் போன்ற நூலக வாரியத்தின் மற்ற நிலையங்களுக்கும் ஒன்பது மில்லியன் பேர் வந்து சென்றனர். முந்திய 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 26.7 மில்லியனாக இருந்தது.
கடந்த ஆண்டு அதிக முறை இரவல் போன நூல்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் நான்கு இடங்களை 'ஹாரி பாட்டர்' தொகுப்புகளே பிடித்தன. மின்நூல் களைப் பொறுத்தமட்டில், மிஷெல் ஒபாமாவின் '2018 மெம்வா பிக்கமிங்' புத்தகம் அதிக முறை இரவல் போனது.
தமிழில் 3,000க்கும் மேற்பட்ட மின்நூல்கள் உள்ளன.
சென்ற ஆண்டில், நூலக வாரியம் தனது முதலாவது நூல் இரவல் சாதனத்தை சுவா சூ காங்கில் நிறுவியது. அந்த நூல் இரவல் சாதனம் வாயிலாக கடந்த ஜூலை முதல் இவ்வாண்டு ஜனவரி வரை 14,600 இரவல், இரவல் நீட்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
"கொரோனா பரவலால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில் நூல் ஆர்வலர்களுக்குச் சிறந்த சேவையாற்றும் நோக்கில், கற்றல், வாசித்தல் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வகைசெய்யும் விதமாக பல்வேறு மின்னிலக்க வசதிகளை அறிமுகப்படுத்தினோம்," என்று நூலக வாரியத்தின் தலைமை நிர்வாகி இங் செர் போங் தெரிவித்தார்.