எஸ்.வெங்கடேஷ்வரன்
காவடி ஆட்டம், மேள தாள முழக்கம் என்று ஆண்டுதோறும் கோலாகலமாக நடந்தேறும் பங்குனி உத்திரத் திருவிழா இவ்வாண்டு கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க அமைதியான, பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டது.
ஈசூன் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் பிரதானமாக நடந்தேறும் திருவிழாக் கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு நல்ல முன்னேற்றங்களைக் கண்டிருந்தன.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கிருமித்தொற்று பரவலாக இருந்ததால் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட வில்லை.
கோயில் வாசலில் மூலவரைத் தரிசித்து பால் பொட்டலங்கள் மட்டுமே வாங்கி, வழங்க முடிந்தது.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் பல பக்தர்கள் விழாவில் மெய்நிகராக இணைந்திருந்தனர்.
கிருமித்தொற்று சூழல் சீராகி வரும் இப்போதைய நிலையில் பால் குடம் எடுப்பது, கோயிலுக்குள் சென்று வழிபடுவது, பால் அபிஷேகம் செய்வது, கோயில் பிரசாதம் பெறுவது போன்ற ஏற்பாடுகள் இடம்பெற்று இருந்தன.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், செம்பவாங் குழுத் தொகுதியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்ரம் நாயர், மரியம் ஜாஃபர், லிம் வீ கியாக், போ லி சான் ஆகியோரும் திருவிழாவிற்கு வருகை புரிந்தனர்.
"பொதுவாக கடந்த ஆண்டுகளில் பங்குனி உத்திரத் திருவிழாக் கொண்டாட்டங்களில் சுமார் பத்தாயிரம் பேர் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு அப்படி செய்ய முடியாது. இருந்தாலும் நிர்வாகக் குழு சிறப்பான முயற்சிகளை எடுத்துள்ளது," என்றார் திரு விக்ரம்.
கொவிட்-19 தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்பட்ட பின்னர் திருவிழாவை முன்பு போல நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அந்த நிலையை எட்டுவதற்கு எல்லாரும் பங்காற்ற வேண்டும் என்றும் திரு விக்ரம் கேட்டுக் கொண்டார்.
நள்ளிரவு 12 மணி முதல் காலை 9.30 மணி வரை கிட்டத்தட்ட 2,500 பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மதியம் 1 மணி அளவில் மொத்த பக்தர்கள் வருகை எண்ணிக்கை ஏறத்தாழ 5,500ஆக இருந்தது.
நேற்றிரவு 9 மணி அளவில் நிறைவடைந்த திருவிழாவில் மொத்தம் ஏறக்குறைய 7,000 பக்தர்கள் கலந்துகொண்டதாக நம்பப்படுவ தாக கோயில் நிர்வாகம் கூறியது.
"பாதுகாப்பு விதிமுறைகளை மீறாமல் திருவிழாவைச் சிறப்பாக நிர்வகிக்க பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம்.
"கைச் சுத்திகரிப்பான், முகக்கவசங்கள், தொண்டூழியர்களும் கோயில் ஊழியர்களும் போட்டுக்கொள்ள கையுறைகள் போன்ற தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார்படுத்தினோம்.
"பக்தர் கூட்டத்தை முறையாக நிர்வகிக்க தடை அரண்களை வைத்து தெளிவான பாதைகளை அமைத்தோம்.
"இணையம் வழி பக்தர்களை பதியவைத்து வேறுபட்ட நேரங்களில் பக்தர் வருகைக்கு ஏற்பாடு செய்தோம். எதிர்பார்த்ததைப் போலவே எல்லாம் சுமூகமாக நடந்தேறின," என்றார் கோயில் நிர்வாகக் குழுச் செயலாளர் திரு அண்ணாதுரை அழகப்பன்.
எந்நேரத்திலும் கோயிலுக்குள் இருந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 250 பேருக்கு உட்பட்டு இருக்க வகை செய்ய, கோயிலுக்கு அருகே இருந்த திடலில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பதிவு செய்வதற்கும் பால் குடங்களைப் பெறுவதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
கிட்டத்தட்ட 200 தொண்டூழியர்களின் உதவியால் விழா சீராக நிர்வகிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது உட்பட முதியோர், உடல் குறைபாடு உள்ளோர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் வழி பாட்டிற்குத் தொண்டூழியர்கள் உதவியதும் குறிப்பிடத்தக்கது.
"உதவி தேவைப்படுவோர் சிலரை நானே கோயிலுக்குள் அழைத்து சென்று வழிபட உதவினேன். இரவு நேரத்தில் தனியாக வந்த சில பக்தர்களுக்குத் தொண்டூழியர்கள் கூடவே இருந்து வழிகாட்டினோம்.
"பொதுவாக பக்தர்கள் விதிமுறைகளைப் புரிந்து நிதானமாக வழிபட்டு சென்றனர்," என்று தொண்டூழியர் திருமதி விஜயலட்சுமி சங்கரன் பிள்ளை, 56, தெரி வித்தார்.