சிங்கப்பூரின் மூன்று பிரதமர்களின் கீழ் பணியாற்றிய முன்னாள் மூத்த அமைச்சர் பேராசிரியர் எஸ். ஜயகுமார், நேற்று தேசிய தின விருது பெற்ற 500க்கு மேற்பட்டவர்கள் கொண்ட பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.
சிங்கப்பூரின் நன்மைக்காகவும் பாதுகாப்புக்காகவும் பரந்த அளவில், மதிப்புமிக்க, உன்னத சேவை வழங்கியதற்காக, பேராசிரியர் ஜயகுமாருக்கு தெமாசெக் விருது (உயர் தகுதி) எனும் நாட்டின் ஆக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமிப் பரவலால் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட விருதளிப்பு விழா நேற்று தொழில்நுட்பக் கல்லூரியின் மத்திய வளாகத்தில் நடைபெற்றது.
விருதுகளை வழங்கிய அதிபர் ஹலிமா யாக்கோப்பும் விருது பெற்றவர்களும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். விருது பெற்றவர்களிடம் கைகுலுக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்பட்டது.
விருதளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், முன்னாள் பிரதமர் கோ சோக் டோங், முன்னாள் அதிபர் டோனி டான் போன்றோரும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைக் கடைப்பிடித்தனர். அவர்கள் அனைவரும் கொவிட்-19 சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பேராசிரியர் ஜயகுமார் தனது வாழ்நாள் முழுவதையும் சிங்கப்பூருக்காக அர்ப்பணித்துள்ளார் என்று பாராட்டப்பட்டார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசதந்திரியாகவும் அமைச்சரவை உறுப்பினராகவும், முக்கிய தருணங்களில் சிங்கப்பூரின் முக்கிய சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்று பாராட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூக சேவை நிபுணர் திரு கோ சூன் ஹுவி, வரலாற்று மேதை பேராசிரியர் வாங் குங்வு இருவருக்கும் மேன்மைதாங்கிய சேவை விருது வழங்கப்பட்டது.
நாட்டுக்காக அரும்பணியாற்றிய விருது பெற்றவர்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கம் மூலம் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். நாட்டுக்குத் தொடர்ந்து சேவையாற்றி மற்றவர்களுக்கு ஊக்கமளியுங்கள் என்று திரு லீ விருது பெற்றவர்களைக் கேட்டுக்கொண்டார்.