இர்ஷாத் முஹம்மது
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பயின்று எந்தத் துறையில் வேலையைத் தேடுவது என்று நினைத்த பலரில் கி.ஹரவின், லக்ஷ்மி மேனன் இருவரும் அடங்குவர்.
இவர்கள் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று கடந்த சில ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
வாய்ப்புகள் மிகுந்த மின்னிலக்க விளம்பரத் துறையில் பரிணமிக்கும் இவர்களுக்கு, இன்னும் அதிக எண்ணிக்கையில் இளம் சிங்கப்பூரர்கள் இந்தத் துறையில் இணையலாம் என்ற வேட்கையும் உண்டு.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறையில் 2016ல் இளநிலைப் பட்டம் பெற்றவர் ஹரவின், 31. அதற்கு முந்தைய ஆண்டு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இதே துறையில் பட்டம் பெற்றவர் லக்ஷ்மி மேனன்.
இருவருக்கும் மின்னிலக்க விளம்பரம் என்றாலே என்னவென்று தெரியாத நிலையில்தான் 'குரூப்எம்' எனும் உலகின் முன்னணி ஊடக முதலீட்டு நிறுவனத்தில் சேர்ந்தனர்.
"நான் படிப்பை முடித்து ஓராண்டு வங்கித் துறையில் பணியாற்றினேன். வேறொரு துறையில் சேரவேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே முன்பு படித்தபோது பயிற்சி வேலையில் பணியாற்றிய மின்னிலக்கத் துறைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்," என்றார் ஹரவின்.
இத்துறையைப் பற்றி அப்போது அவ்வளவாக தெரியாது. அதில் பணிபுரிவது சுவாரசியமாக இருக்கும் என்று தாம் திரட்டிய தகவல்கள் மூலம் தெரியவந்ததாக இவர் குறிப்பிட்டார்.
"பட்டம் பெற்று ஒருசில மாதங்கள் வேலை தேடினேன். எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் கவனமாக இருந்தேன். அப்போது மின்னிலக்கமே எதிர்காலத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அந்த அனுமானத்தில் நான் இத்துறையில் சேர்ந்தேன்," என்ற லக்ஷ்மி, மின்னிலக்க விளம்பரத் துறையில் சேருவோம் என்று ஆரம்பத்தில் தாம் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை என்று கூறினார்.
கண்மூடித் திறப்பதற்குள் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டதாகக் கூறிய இவர், தினமும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதைச் சுட்டினார்.
இந்த வேலையில் சேர்வதற்கு ஆர்வம் ஒன்றே போதும் என்ற கருத்தை வெளிப்படுத்திய ஹரவினும் லக்ஷ்மியும், வேலையில் கற்றுக்கொள்ளும் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டினர்.
இந்தத் துறை சிங்கப்பூரில் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் இருப்பதாகக் கூறும் இவர்கள், இந்தத் துறையில் இன்னும் வாய்ப்புகள் ஏராளம் என்கின்றனர்.
"இது சுவாரசியமாகவும் சவாலாகவும் இருக்கும் ஒரு துறை. நாம் சவாலை எதிர்கொண்டால் இந்தத் துறையில் நிறைய சாதிக்கலாம். ஆனால் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும்," என்றார் ஹரவின்.
"தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது. பெரிய நிறுவனங்களும் மின்னிலக்கத் தளத்தில் விளம்பரம் செய்யும் காலகட்டத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று விளக்கினார் லக்ஷ்மி.
"இந்தத் துறையில் வாடிக்கையாளர்களுடன் பேசுவது, அவர்களின் தேவையை அறிவது, குழுவினருடன் கலந்தாலோசித்து தீர்வுகளைக் கண்டறிவது, பின்னர் இதர குழுக்களுடன் இணைந்து வெவ்வேறு திட்டங்களை வரைவது, அதற்கான விநியோகிப்பாளர்களுடன் உரையாடி பரிவர்த்தனையை மேற்கொள்வது என பல நிலைகளில் பல வேலைகளை இந்தத் துறை கொண்டுள்ளது," என்று விளக்கிய ஹரவின், ஒவ்வொருவருக்கும் ஏற்ற வேலைகளைக் கண்டறியலாம் என்றார்.
"வழக்கமான வர்த்தக நிறுவனத்தின் செயல்பாடுகள்தான் இந்த நிறுவனத்திலும் இருக்கின்றன என்றாலும் இவை மின்னிலக்கத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படுவதே வித்தியாசம்," என்று எடுத்துரைத்தார் லக்ஷ்மி.
எதிர்காலத்தில் எல்லாமே மின்னிலக்கமயமாக போகிறது என்பதும் இந்தத் துறை என்றுமே பசுமையாகவே தேவைகள் நிறைந்து இருப்பதும் இத்துறையின் அனுகூலங்கள்.
காலப்போக்கில் இத்துறை நல்ல வாய்ப்புகளுடன் இருப்பது உறுதி என்று கூறும் இவர்கள், இன்னும் அதிகமான சிங்கப்பூரர்கள் இந்தத் துறையில் பணியாற்ற ஆர்வம் கொள்ளலாம் என்கின்றனர்.
பல்கலைக்கழகங்களிலும் பலதுறைத் தொழிற்கல்லூரிகளிலும் படிப்பை முடித்து வேலைக்குச் செல்ல காத்திருப்போர், இந்தத் துறையில் சேர்வதில் நாட்டம் கொள்ளலாம் என்பது இவர்களின் கருத்து.
வேறொரு துறையில் தற்போது பணிபுரிந்துவரும் இளையர்கள், வேறொரு பணிக்குச் செல்லும் எண்ணம் கொண்டிருந்தால் அவர்களும் இத்தகைய துறைக்குத் தங்களின் தெரிவுகளை விரிவுபடுத்தலாம்.
"ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் மூலம் அரசாங்கம் பல வசதிகளை சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. அவற்றில் மின்னிலக்கத் துறைக்கு உகந்த பல பாடத்திட்டங்கள் உள்ளன.
"இளையர்கள் அத்தகைய பாடங்களைக் கற்பதால் அவர்களால் இத்துறையில் காலடி எடுத்துவைக்க சற்று எளிதாக இருக்கும்.
"பின்னர் புதிய வேலையில் சேர்ந்தவுடன் மேலும் ஆழமான ஆற்றலையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளலாம்," என்று பகிர்ந்தார் ஹரவின்.
"பயிற்சிக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. பொதுவாக எல்லாருக்குமே பயிற்சி வழங்கப்படுகிறது. இணையத்திலேயே அதில் சான்றிதழ் பெறலாம். கட்டணம் செலுத்தாமல் சில பயிற்சிகளில் சேரலாம்.
"முக்கியமாக, நாம் அதற்கு முயற்சி செய்யவும் நேரம் செலவழிக்கவும் வேண்டும்," என்று எடுத்துரைத்தார் லக்ஷ்மி.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலிலும் இவர்கள் பணியாற்றும் 'குரூப்எம்' நிறுவனம் ஒருவரைக்கூட இங்கு ஆட்குறைப்பு செய்யவில்லை. சம்பளக் குறைப்பாலும் யாரும் பாதிக்கப்படவில்லை.
"இன்னும் சொல்லப்போனால் எங்கள் நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது," என்று பெருமிதத்துடன் பகிர்ந்தனர் இவர்கள்.