உலகையே அச்சுறுத்திய கொரோனா கிருமித் தொற்று காலத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வந்தவர்கள் இப்போது அலுவலகத்துக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இம்மாதம் 5ஆம் தேதி முதல் 75% ஊழியர்கள் பணிக்குத் திரும்பலாம் என அரசாங்கம் அறிவித்துள்ள வேளையில் ஊழியர்களை அலுவலகத்துக்கு ஈர்க்க 'வைஸ்; எனும் பணம் அனுப்பீட்டு நிறுவனம் பாய லேபாரில் உள்ள தங்களது அலுவலகத்தை வித்தியாசமாக வடிவமைத்துள்ளது.
முன்பு அலுவலக இடத்தில் கிட்டத்தட்ட 70% இடம் ஊழியர்களின் தனிப்பட்ட இருப்பிடங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு நேரடி கூட்டங்களுக்கு வழிவகுக்கும் விதத்தில் ஏறத்தாழ 50% இடம் பொது இடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்குவதற்குப் பதிலாக அவர்கள் வசதியாக தங்கள் குழுவுடன் அமர்ந்து பணியாற்றும் விதத்தில் அலுவலகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இடைவெளி அடையாளங்கள், சுத்திகரிப்பான் நிலையங்கள் போன்றவையும் உள்ளன.