சிங்கப்பூரில் பேரங்காடிகளில் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை பயன்படுத்த கட்டணம் விதிக்கும் ஓர் ஏற்பாட்டின் பேரில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் இப்போது செயல்பட்டு வருகின்றன.
நீடித்த நிலத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று இதனை அறிவித்தார். ஒரு முறை பயன்படுத்திவிட்டு கழிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயனீட்டைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முயற்சிகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த அமைச்சும் வாரியமும் எற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி வைத்து அமைச்சர் உரையாற்றினார். பிளாஸ்டிக் பைகள் பயனீட்டைக் குறைத்துக்கொள்ள குடிமக்கள் பணிக்குழுக்கள் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சும் வாரியமும் அந்த நிகழ்ச்சியில் பதிலளித்தன.
ஒரு முறை பயன்படுத்தப்பட்டு ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் ஏற்பாட்டை உருவாக்குவதன் தொடர்பில் அமைச்சும் வாரியமும் பொது கலந்துரையாடல்களைத் தொடங்கும் என்றார் அமைச்சர்.
பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் விதித்தால் குறைந்த வருமான குடும்பங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் டாக்டர் கோர் கூறினார்.
ஒரு பைக்கு கட்டணம் விதிப்பதா அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பதா என்பது பற்றி அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் அவர் விளக்கினார்.
ஒரு பைக்கு ஐந்து காசு அல்லது 10 காசு என்ற கட்டணம் சாத்தியமாகலாம் என்பதை அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
கட்டணத்தை நடப்புக்குக் கொண்டு வர தேவைப்படக்கூடிய காலவரம்பு பற்றியும் பரிசீலிக்கப்படும் என்றார் அவர். சட்டபூர்வ திருத்தங்களைச் செய்ய வேண்டிய தேவை இருக்கக்கூடும் என்றும் டாக்டர் கோர் மேலும் கூறினார்.
பிளாஸ்டிக் பைகள் மூலம் வசூலாகும் தொகை எந்த அமைப்பிடம் சென்று சேர வேண்டும் என்பதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்த அமைச்சர், பொதுமக்களுடன் கூடிய ஆலோசனைகளைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டண விவரங்கள் முடிவு செய்யப்படும் என்றார்.
குடிமக்கள் பணிக்குழு கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்திடம் 14 யோசனைகளைத் தாக்கல் செய்தது. அவற்றில் எட்டு யோசனை களுக்கு அமைச்சும் வாரியமும் ஆதரவு அளிக்கின்றன.
பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் ஏற்பாடு அந்த யோசனைகளில் ஒன்று.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குக் கட்டணம் விதிப்பதைப் பயனீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளும் போக்கு அதிகமாகி வருகிறது. கட்டணம் வசூலிக்க அரசாங்கம் முடிவு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று டாக்டர் கோர் கூறினார்.
என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம் 2019 முதல் தனது 25 கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணத்தை அமல்படுத்தி வருகிறது. 2019க்கும் 2020க்கும் இடையில் இந்தக் கடைகள் 15.6 மில்லியன் பிளாஸ்டிக் பைகளை மிச்சப்படுத்தி இருக்கின்றன என்பதை அமைச்சர் சுட்டினார்.
யுனிக்லோ, வாட்ஸ்சன்ஸ், எச்&எம், தி பாடி ஷாப் போன்ற கடைகளும் ஒரு முறை பயன்
படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கின்றன. 2019ல் ஏறத்தாழ இத்தகைய 200,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரி ஆலைக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலைமை நீடித்தால் 2035ல் செமகாவ் தீவில் கழிவுகளைக் கொட்ட இடமின்றிப் போய்விடும்.