ஆர்த்தி சிவராஜன்
படங்கள், காணொளிகளைப் பகிர்வதற்குப் பயன்படும் சமூக ஊடகத் தளமான ஸ்னாப்சேட்டில் (snapchat) தமிழைப் பயன்படுத்தும் வசதியை ஸ்னாப்சேட்டுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் 28 வயது திரு ஜெ.எஸ். சசிகுமார்.
சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தில் பயிலும் இவர் சிறு வயதிலிருந்தே வரைபட வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள வரைபட வடிவமைப்புகளைப் பார்த்த ஸ்னாப்சாட்டின் மூத்த வடிவமைப்பாளர் ஒருவர் அவருடன் தொடர்புகொண்டு ஸ்னாப்சாட்டில் தமிழ் வரைபடங்களை உருவாக்குவது குறித்து இவருடன் பேசினார். '
ஃபில்டர்ஸ்', 'ஸ்டிக்கர்ஸ்' ஆகியவற்றைத் தமிழில் உருவாக்கும் திட்டத்தை நான்கு கட்டங்களாக தற்சமயம் மேற்கொண்டு வருகிறார் திரு சசிகுமார்.
ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வடிவமைப்புகளை உருவாக்குகிறார். இரண்டாம் கட்டத்தை முடித்துள்ள இவர், தற்போது மூன்றாம் கட்டத்தில் இறங்கியுள்ளார்.
"முதல் இரண்டு கட்டங்களிலும் சில கருப்பொருட்களை கொடுத்தார்கள். அவை தொடர்பான தமிழ் வார்த்தைகளை, தனிப்பட்ட வடிவமைப்புகளாக உருவாக்கி கொடுத்தேன். இவை தற்காலத்துக்கு ஏற்ற, நவீன எழுத்துருக்களைக் கொண்டவையாக இருப்பதை உறுதிசெய்தேன்," என்றார் திரு சசிகுமார்.
எடுத்துக்காட்டாக, இந்தத் தளத்தில் 'குட்மார்னிங்' என்பது தமிழில் "காலை வணக்கம்" என்று தோன்றும். ஒருவர் போகும் இடத்திற்கு சம்பந்தப்பட்ட தமிழ் வார்த்தைகளும் அந்த செயலியில் தோன்றும். கடற்கரைக்குச் சென்றால், "கடற்கறைக் காற்று" என்ற வார்த்தைகள் தோன்றும். ஒருவர் இந்தச் செயலி எடுக்கும் புகைப்படங்களில் அல்லது காணொளிகளில் இந்தத் தமிழ் வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். பெரும்பாலான ஃபில்டர்ஸ் மாற்ற முடியாதவை. சில ஃபில்டர்ஸ் 'ஜிஃப்' வடிவத்தில் இருக்கும் என பகிர்ந்தார் அவர்.
தமிழ் எழுத்துருவை வடிவமைப்பதற்கு 'இல்லஸ்ட்ரேட்டர்' (illustrator), 'போட்டோஷாப்' (photoshop) ஆகிய மென்பொருள்களை இவர் பயன்படுத்துகிறார்.
முதல் கட்டமாக, தமிழ் எழுத்துரு இந்தியாவில் மட்டும் வெளியிடப்படும். பின்னர், தமிழ் புழங்கும் நாடுகளிலும் 'ஸ்னாப்சேட்'டில் தமிழ் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது என்றார் இவர்.
வரைபட வடிவமைப்பை சுயமாக கற்ற திரு சசிகுமார், தனது படைப்புகளை இன்ஸ்டாகிராமில் ஜேஎஸ்எஸ் க்ரியேடிவ்ஸ் (JSS Creatives) என்ற பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.