சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உதவி தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு மேலும் சிறந்த பங்காளிகளாக இருந்து ஆதரவு வழங்க, மூன்று லாப நோக்கற்ற அமைப்புகள் ஒரே கூரையின்கீழ் வரவுள்ளன. புதிய சமூக வளாகத்தை நேற்று கல்வி அமைச்சரும் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லாரன்ஸ் வோங் திறந்து வைத்தார்.
ஃபார் ஈஸ்ட் ஆர்ச்சர்ட், ஃபார் ஈஸ்ட் நிறுவனம், செகிசுய் ஹவுஸ் ஆகிய மேம்பாட்டாளர்கள், இப்புதிய 21,500 சதுர அடி 'ஸ்பேஸ்@வூட்ஸ் ஸ்குவேர்' இடத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.
'கேர் கானர் சிங்கப்பூர்', 'நியூ லைஃப் சமூகச் சேவைகள்', 'வோர்ல்ட் விஷன் சிங்கப்பூர்' ஆகிய மூன்று லாப நோக்கற்ற அமைப்புகளும் ஒருங்கிணைந்த முறையில் கைகோத்து சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் சமூகத்திற்குப் பலனும் பலமும் கிட்டும் என்று 'கேர் கானர் சிங்கப்பூர்' வெளியிட்ட அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
"அரசாங்கம் மேலும் அதிக உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் சமூகத்தினரிடையே உதவி மற்றும் ஆதரவு நல்கும் உணர்வையும் கூட்டுறவையும் நாம் வலுவாக்குகிறோம்," என்றார் 'கேர் கானர் சிங்கப்பூர்' அமைப்பின் புரவலராகவும் உள்ள திரு வோங்.
மக்களுக்கு அமைப்புகள் மேலும் சிறந்த முறையில் சேவையாற்றவும் புதிய தொண்டூழியர்களைச் சென்றடையும் முயற்சிகளை விரிவாக்கவும் இப்புதிய வளாகம் வழிகோலும் என்றார் அவர்.
புதிய வளாகத்தில் மனநலச் சோதனை, மனநலப் பிரச்சினைகளுடைய இளையர்களுக்கு அடிப்படை ஆதரவு போன்ற சேவைகளை கேர் கானர் அமைப்பின் ஒருங்கிணைந்த இளையர் சேவை முன்னோட்டத் திட்டம் வழங்கவுள்ளது.
அமைப்பின் மூத்தோர் சேவைகள் குழு, முதியவர்களுக்கான உடல் வலிமைப் பயிற்சிகளை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டது.
எழுத்தறிவு மற்றும் சிறுவர்களுக்கான வழிகாட்டித் திட்டங்களைப் புதிய வளாகத்தைக் கொண்டு நியூ லைஃப் சமூக சேவைகள் அமைப்பு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர் இளையர் படை, நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரி ஆகிய பங்காளிகளுடன் வோர்ல்ட் விஷன் அமைப்பு இணைந்து வளாகத்தின் மூலம் இளையர்களுக்குச் சேவைக் கற்றல் வாய்ப்புகளை வழங்கவுள்ளது.
தொண்டூழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையமாகவும் வளாகத்தைப் பயன்படுத்த மூன்று அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன.
தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குதல், நட்புறவு ஏற்படுத்துதல், வழிகாட்டுதல், பயிற்சி அளித்தல், இளையர் சமூகத் திட்டங்கள் என ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 2,000 தொண்டூழியர்களுக்கு இவ்விடத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
சமூகம், பொதுத் துறை, தனியார் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலன் இப்புதிய வெளி என்றார் கேர் கோனர் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி யாப் போ கெங்.
சிங்கப்பூரர்களுக்கு லாப நோக்கற்ற அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆதரவு