ஆர்த்தி சிவராஜன்
ஒருவர் வாழ்வில் எத்தனை தடைகளைச் சந்தித்தாலும் இறுதி வரை விடாமுயற்சியுடன் இருப்பது முக்கியம்.
'ஊக்கமது கைவிடேல்' எனும் ஔவையாரின் ஆத்திச்சூடி இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கு 29 வயது திரு கணேஷ் பூமிநாதன், 35 வயது திருமதி கௌசல்யா செல்வராஜ் ஆகியோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.
அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு நடத்திய 'ஊக்கமது கைவிடேல்' என்ற நிகழ்ச்சியில் இவ்விரு இளையர்கள் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்துகொண்டு தங்கள் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர். இந்த நிகழ்ச்சி இம்மாதம் 18ஆம் தேதி மாலை 2 மணிக்கு இணையம் வழி நடந்தது.
இளம் சாதனையாளர் என அறிமுகமான திரு கணேஷுக்கு 12 வயதிலேயே மூச்சுக்குழாயில் புற்றுநோய் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளாக கதிரியக்க சிகிச்சை பெற்றதுடன் அவரது தொடக்கநிலை இறுதி ஆண்டு தேர்வையும் வெற்றிகரமாக எழுதினார்.
பட்டப்படிப்பு இறுதி ஆண்டில் அவரது மூச்சுக்குழாயில் மீண்டும் ஒரு கட்டி உருவாகியது. அதை அகற்ற நான்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன. இருப்பினும் மனந்தளராமல் தமது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
தற்போது மாணவர்கள் பலருக்கு விண்வெளி பொறியியல் சார்ந்த படிப்பைக் கற்றுக்கொடுத்து வரும் இவர், விண்வெளிக்கு அனுப்பப்படும் முதல் சிங்கப்பூர் வீரர் என்ற GOSPACE திட்டத்தில் பொறியிய லாளராக ஈடுபட்டு வருகிறார்.
வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்பட்டாலும், அவற்றை கடந்து வந்தபோது மகிழ்ச்சியாக இருந்த தாக அவர் பகிர்ந்துகொண்டார்.
மற்றொரு பேச்சாளரான
திருமதி கௌசல்யா செல்வகுமார், சாதாரண நிலைத் தேர்விற்கு படிக்கும் நேரத்தில் கருவுற்றார்.
குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்த பின் அவரால் 'ஓ' நிலைத் தேர்வை எழுத முடியவில்லை.
முதல் கணவரை விவகாரத்து செய்து, மீண்டும் திருமணம் செய்து, மேலும் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த திருமதி கௌசல்யாவிற்கு தனது முன்னேற்றத்திற்கு ஏதும் செய்ய வில்லையே என்ற எண்ணம் உறுத்தியது.
மருத்துவத் துறையில் நாட்டம் கொண்ட திருமதி கௌசல்யா 31 வயதில் தொழில்நுட்ப கல்விக்கழகத்தில் சேர்ந்து தாதியர் துறையில் நைடெக் படிப்பை மேற்கொண்டார்.
சக மாணவர்களைவிட மூத்தவராக இருந்தாலும், அவர்களது ஆதரவு அவருக்கு ஊக்கம் அளித்தது. ஹாங்காங், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளையும் அவர் பெற்றார்.
தற்போது அவர் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் சேர்ந்து பயின்று வருகிறார்.
"மற்ற இளம் மாணவர்கள்போல் படிப்பிற்கு மட்டுமே முன்னுரிமை காட்ட முடியவில்லை. என் பிள்ளை களையும் கணவரையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. அவ்வப்போது சோர்வடையும் தருணங்களில், கடந்தகாலத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள், விரக்திநிலை ஆகியவை நினைவுக்கு வரும்.
"வாழ்வில் ஏற்படும் சவால்களை வென்று சாதிக்க வேண்டும் என்ற உந்துதலை இது எனக்குத் தரும். முடியாதது என்பது ஒன்றும் இல்லை என்று உணர்ந்து செயல்படுவேன்," என்று பகிர்ந்தார் திருமதி கௌசல்யா.
தங்கள் வாழ்க்கைப் பாதையில் தடைகற்களை படிகற்களாக மாற்றிய இருவரும் அவர்களின் அனுபவங்களையும் வெற்றிகளையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று கூறினார் முனைவர் இரத்தின வெங்கடேசன்.