ப. பாலசுப்பிரமணியம்
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கத்தினால் ஏற்பட்டதாகும்.
இருப்பினும், கட்டுப்பாடுகளுக்கு இடையே உற்சாகம் குறையாமல் புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு துறப்பதற்கு ஏதுவாக இதர சமயப் பங்காளித்துவ அமைப்புகள் மாதம் முழுவதும் ஆதரவு நல்கி வருகின்றன.
அவ்வரிசையில் இந்து அறக்கட்டளை வாரியம் ஆறு பள்ளி
வாசல்களுக்கும் ஜாமியா சிங்கப்பூர் அமைப்பிற்கும் நேற்று முன்தினம் 100,000 பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.
"கடந்த சில ஆண்டுகளில் ரமலான் மாதத்தில் அரிசி பைகளைப் பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்தோம். தற்போது குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால், பேரீச்சம்பழங்களை விநியோகிக்க முடிவு செய்தோம். சில பகுதிகளில் பேரீச்சம்பழங்கள் கடைகளில் எளிதில் கிடைக்க முடியாத பற்றாக்குறையையும் இது பூர்த்தி செய்கிறது," என்று தெரிவித்தார் இந்து அறக்கட்டளை வாரிய தலைமை நிர்வாக அதிகாரி திரு த.ராஜசேகர்.
அங்கூலியா, அப்துல் கஃபூர், பா'ஆல்வி, ஜாமிஆ (சூலியா), மெளலானா முகம்மது அலி, அல்-அப்ரார் பள்ளிவாசல்களுக்கு தொழுகை நேரத்தில் வரும் பக்தர்களுக்கு இந்த பேரீச்சம்பழ 'பேக்கெட்டு'கள் வழங்கப்படும்.
"பல இனத்தவர்கள் பள்ளி
வாசல்களில் நோன்பு கஞ்சிகளை பெற்றுக்கொள்ளும் அதேவேளையில் பல சமய அமைப்புகளும் இதுபோன்று எங்களுக்கு நன்கொடை வழங்குவது நாட்டின் சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாக உள்ளது. இது பெருமைக்குரியது," என்று கூறினார் அங்கூலியா பள்ளிவாசல் இமாம் திரு முஹம்மது சர்புதீன் அப்துல்லா.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்
ஆலயத்தில் இந்தப் பேரீச்சம்பழங்களைச் சிறிய பெட்டிகளில் பிரித்து, விநியோகிக்க உதவுவதில் இந்து அறக்கட்டளை வாரிய இந்து இளையர் கட்டமைப்பின் தொண்டூழியர்கள், ஊழியர்கள் மற்றும் ஹொப் இனிஷியேட்டிவ் அலாயன்ஸ் (HIA) அமைப்பின் தொண்டூழியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
"இதுபோன்ற இதர சமய அமைப்புகளுடன் இணைந்து
செயல்படுகையில் எங்களிடையே நட்புறவு மலர்கிறது. முஸ்லிம்களின் நோன்புக் காலத்தில், நிறைவாக ஒரு காரியத்தைச் செய்துள்ளோம் என்ற திருப்தியும் இதன் வழி கிடைக்கிறது," என்று குறிப்பிட்டார் தாதியாகப் பணியாற்றும் இந்து அறக்கட்டளை வாரிய இந்து இளையர் கட்டமைப்பின் தொண்டூழியர் குமாரி அனுப்பிரியா பன்னீர்செல்வன், 35.