எம்ஆர்டி ரயிலில் முகக்கவசம் அணியாமல் சென்ற 39 வயது நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அவர் தொந்தரவு விளைவித்ததாகவும் பாதுகாப்பு இடைவெளி விதியை அவர் மீறியதாகவும் போலிசார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் "நான் சமயப்பற்றுள்ளவன், மாமா மற்றும் தாத்தாக்கள் முகக்கவசம் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது வெறுப்பாக இருக்கிறது," என்று மற்ற பயணிகளிடம் அவர் உரக்கக் கூறுவதை கேட்க முடிகிறது.
சக பயணி ஒருவர், அவருக்கு முகக்கவசம் வழங்கினார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார். ஒரு பெண் பயணிக்குப் பக்கத்தில் அவர் அமர்ந்தபோது அந்தப்பெண் பயணி எழுந்து சென்றுவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் நடந்த சம்பவத்தை கற்றல் நிறுவனத்தின் இயக்குநரான ஜெரோம் டான் என்பவர் பதிவு செய்திருந்தார்.
ஜூ கூன் நிலையத்தை நோக்கிச்சென்றபோது முகக்கவசம் அணியாத நபர் ரயிலில் ஏறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
ரயிலில் இருந்த முதியவரையும் முகக்கவசம் எடுக்கச் சொல்லி அந்தப் பயணி வற்புறுத்தியதாகவும் முகக் கவசத்தால் நோய் உண்டாகும் என்று அவர் கூறியதாகவும் திரு டான் சொன்னார்.
ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்தில் டான் இறங்கியபோது அந்தப் பயணி தொடர்ந்து ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
இந்தச்சம்பவத்தை எம்ஆர்டி நிலைய ஊழியரிடம் அவர் தெரிவித்தபோது அடுத்த நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக எம்ஆர்டி ஊழியர் கூறினார்.
இதையடுத்து முகக்கவசம் அணிய மறுத்தவரை போலிசார் கைது செய்துள்ளனர். போலிசார் விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் மற்றவர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சமூகப்பொறுப்பற்ற நடத்தைகளை அனுமதிக்க முடியாது என்று ரயில் சேவையை நடத்தும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
இதற்கு முன்பு நடந்த சம்பவத் தில் ஷுன்ஃபு மார்ட் உணவங்காடி நிலையம் அருகே முகக்கவசம் அணியாமல் பிரேம்ஜீத் கவுர், 41 என்பவர் வழிபோக்கர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவருக்குப் பின்னர் இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப் பட்டது.
இவரது காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தான் ஒரு சுய அதிகாரம் பெற்றவர் என்று அவர் கூறியதை காணொளி காட்டியது.