தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான 'பயோஎன்டெக்' தனது வட்டார தலைமையகத்தையும் உற்பத்தித் தளத்தையும் சிங்கப்பூரில் அமைக்கஉள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி தயாரிப்புக்காக 'ஃபைசர்' நிறுவனத்துடன் இணைந்திருந்த 'பயோஎன்டெக்', அதன் தென்கிழக்காசிய வட்டாரத் தலைமையகத்தை அமைக்க சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒப்புதலைப் பொறுத்து நிறுவனம் தன் சிங்கப்பூர் அலுவலகத்தை இங்கு திறப்பதுடன் அதன் 'எம்ஆர்என்ஏ' உற்பத்தித் தளத்துக்கான கட்டுமானப் பணிகளையும் 2021ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தளம் 2023ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்றும் குறைந்தது 80 வேலைகள் இதனால் உருவாகும் என்றும் அந்த ஜெர்மானிய நிறுவனம் நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன் விரிவாக்கத் திட்டம் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதால், 'கொவிட்-19 தடுப்பூசிகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை சிங்கப்பூருக்கு ஒதுக்கப்படும்' என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் இணை நிறுவனருமான உகர் சஹின் நேற்று நடைபெற்ற இணையச் சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், அனைத்துலக விநியோகத்திற்காக அடுத்த 12 மாதங்களில் தேவைப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பில் சிங்கப்பூரின் இப்புதிய உற்பத்தித் தளம் தங்களுக்கு உதவாது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய உற்பத்தி ஆற்றலில் உருவாகும் தடுப்பூசிகளை மேலும் அதிகரிப்பதால் மட்டுமே அனைத்துலகத் தடுப்பூசி விநியோகத்தைக் கையாளமுடியும் என்றார் அவர்.
'பைசர்' நிறுவனத்துடன் இணைந்து 2021ல் மூன்று பில்லியன் தடுப்பூசி அளவுகளை விநியோகம் செய்வதே அதன் திட்டம். முன்னர் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் இந்த அளவு 50% அதிகம். மேலும் 40 விழுக்காட்டுக்கு மேல், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஒதுக்கப்படும் என்றார் டாக்டர் சஹின்.
சிங்கப்பூரில் நிறுவனம் செய்யும் முதலீடு பல நூறு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது என்று கூறிய அவர், கொவிட்-19 நிலவரத்தையும் தாண்டி நீண்டகால முதலீடாக இதைக் கருதுவதாகக் குறிப்பிட்டார். வெவ்வேறு தடுப்பூசிகளுக்கும் சிகிச்சைகளுக்கும் வட்டார மற்றும் உலகளவில் நிறுவனத்தை நிலைபெறச் செய்வது தங்களது விருப்பமும் கூட என்றார் அவர். அதிநவீன உற்பத்தி மற்றும் மின்னிலக்கக் கட்டமைப்பைக் கொண்டு உருவாகவுள்ள புதிய கட்டடத்தில் தொற்று நோய்கள், புற்றுநோய் ஆகியவற்றுக்கான பலதரப்பட்ட 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் உருவாக்கப்படும் என்றது 'பயோஎன்டெக்'.
இப்புதிய திட்டத்தால் சிங்கப்பூரிலுள்ள உயிர்மருத்துவத் துறையின் மதிப்பு உயரும் என்றார் இணையச் சந்திப்பில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்.