இந்து இளங்கோவன்
கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்து நண்பர்களோடு வகுப்பு
களுக்குச் செல்லவும் சேர்ந்து படிக்கவும் சாப்பிடப் போகவும் தொடங்கிய வேளையில் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது கொவிட்-19 கிருமிப் பரவல்.
இதனால் மாணவர்களுக்குத் திரும்பவும் வீட்டிலிருந்தே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சில மாதங்களுக்கு இணையம் வழி கற்றல் அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு கணினியின் முன் அமர்ந்து ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களில் கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
'ஸூம்' தளத்தைப் பயன்படுத்தும் முறை, காணொளி, ஒலி அமைப்புகளின் தொழில்நுட்பத்தையும் புரிந்துகொள்வதற்கே சில நாட்கள் எடுத்தன. பரிச்சயமில்லாத இணையம் வழி கற்றல் நடை முறைகளால் மாணவர்களுடன் பெற்றோரும் சிரமப்பட்டனர்.
இம்முறை இணையம் வழி கற்றலில் உள்ள சவால்களை அறிந்து அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டுள்ளன பள்ளிகள். ஆனால் என்னதான் தயார்நிலை கூடியிருந்தாலும், கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை மாணவர்கள் எவ்வாறு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள்
கடந்த வாரமும் இந்த வாரமும் தொடக்கக்கல்லூரிகளில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற இருந்தன. ஆனால் திடீரென்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் தேர்வுகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வுகளைத் தொடக்கக் கல்லூரிகள் தற்போது ஒத்திவைத்தாலும், வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஜிசிஇ மேல் நிலைத் ('ஏ' நிலை) தேர்வுகளுக்குத் தயார் செய்துகொண்டிருக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலருக்கு இந்த இணையம் வழிகற்றலில் ஈடுபாடு இல்லை.
நேரடியாக வகுப்பில் ஆசிரியர் கற்பிக்க, உடனடியாக சந்தேகங்களை நண்பர்களுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்வதற்கு இணையம் வழி கற்றல் முறை ஈடாகாது என்பது இவர்களின் கருத்து.
"கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் வாய்மொழித் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் இணையம் வழி கற்றலுக்கு மாறியுள்ளதால் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்குப் பதற்றமளிப்பது என்னவென்றால், ஜூலை மாதம் தொடக்கத்தில் ஜிசிஇ மேல் நிலை தமிழ் வாய்மொழித் தேர்வு உள்ளது.
"அதற்கு எங்களைத் தயார்ப்படுத்த ஆசிரியர்களின் உதவி தேவை. இணையம் வழி கற்றல் சிறந்த கற்றலுக்கு வழிவகுக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. நேரடியாக வகுப்பறையில் ஆசிரியருடன் அமர்ந்து வாய்மொழித் தேர்வுக்குத் தயார் செய்வதைத்தான் நான் விரும்புகிறேன்," என்று கத்தோலிக்கத் தொடக்கக்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான 17 வயது கண்ணன்
வைந்தயநாதன் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
கல்வி கற்க ஏற்ற சூழலும்
கட்டமைப்பும் தேவை
சுவா சூ காங் உயர்நிலைப்
பள்ளியில் உயர்நிலை ஒன்றாம் வகுப்பில் பயிலும் ப. விகாஸ்னி சென்ற ஆண்டு இணையம் வழி கற்றலின்போது இணைய சேவைகளில் தாம் சந்தித்த பிரச்சினைகளைப் பற்றியும் வீட்டில் இருந்த ஒரே ஒரு கணினியை தாமும் தமது தம்பியும் பகிர்ந்துகொண்ட அனுபவங்களையும் நினைவுகூர்ந்தார்.
இவ்வாண்டுக்கான இணையம் வழி கற்றலுக்கு ஏற்ற தனிப்பட்ட கற்றல் சாதனங்களைப் பள்ளியே இவருக்கு தந்துள்ளது.
விகாஸ்னியைப் போன்றே பல மாணவர்களுக்குப் பள்ளிகளே சாதனங்களை வழங்குகின்றன.
வீட்டில் போதிய கணினிகள் இல்லாத பிள்ளைகள் படிப்பில் பின்தங்கிவிடாமல் இருப்பதை இது உறுதிசெய்கிறது.
வீட்டில் படிப்பதற்கு ஏற்ற சூழல் அனைவருக்கும் கிடைப்பதில்லை. புதிய கட்டுப்பாடுகளால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலிருந்தவாறே வேலை செய்கின்றனர், படிக்கின்றனர்.
வேலை செய்யவும் படிக்கவும் வீட்டில் போதிய இட வசதி இல்லாததால் இணைய பாடங்களின்போது பல கவனச் சிதறல்களுக்கு ஆளாவதாக சில மாணவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் சில மாணாவர்கள் இணையம் வழி கற்றலை வரவேற்கின்றனர். ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதைக் காட்டும் காணொளிகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அந்தக் காணொளிகளை மீண்டும் பார்த்துப் பாடங்களைப் புரிந்து கொள்ளும் வசதி இப்போது இருப்பதாக மாணவர்கள் கூறினர்.
நண்பர்களுடன் இணைந்து
பாடம் படிப்பது
சக மாணவர்களுடன் இணைந்து செய்யும் ஒப்படைப்புகளை முடிப்பதில் மாணவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மனித வள மேலாண்மை துறையில் பயிலும் நூர் இஷானா தெரிவித்தார்.
"எங்கள் ஒப்படைப்புகளை இணையம் வழி ஆசிரியர்கள் முன் படைத்துக்காட்டும் முறை ஏற்பட்டுள்ளது. வகுப்பில் அனைவருக்கும் முன்னால் படைத்துக் காட்டு வதற்கும் இணையம் வழி படைத்துக்காட்டுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குழுவாகச் சேர்ந்து செய்யும் பாடங்களுக்கு இணையம் வழியே கலந்துரையாடல் செய்யவேண்டிய நிலையும்
வந்துவிட்டது." என்றார் இஷானா.
'ஸூம் சோர்வு' (Zoom Fatigue)
இந்நிலையில், இணையம் வழி கற்றலால் மாணவர்களுக்கு 'ஸூம் சோர்வு' ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
'ஸூம் சோர்வு' என்பது பல மணி நேரத்துக்கு இணையம் வழி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் ஏற்படும் சோர்வாகும். இதைச் சமாளிக்க சில பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்குப் பிறகும் இடைவெளி தரப்படுகிறது.
புதிய கற்றல் முறையால் பல புதிய சவால்களை மாணவர்கள் சந்தித்து வரும்போதிலும் மனந்தளராமல் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடர்கின்றனர்.