சாங்கி விமான நிலையம் முனையம் 3 தொடர்பான கொவிட்-19 தொற்றுக் குழுமத்தின் தோற்றுவாய், அந்த முனையத்தின் வருகை வாயில்களும் பயணிகள் சரக்குப் பெட்டிகளை எடுத்துக்கொள்ளும் கூடமும்தான் என்பது புலன்விசா ரணை மூலம் தெரியவந்துள்ளது.
அந்த இடங்களில் தரையிறங்கி வந்த பயணிகளுடன் மிக அணுக்கமாக இருந்து ஊழியர்கள் செயல்பட்டதாக சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமி தொற்றி இருப்பதாகத் தெரியவந்த விமான நிலைய ஊழியர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் வருகைக் கூடத்தில்தான் பரவலாக வேலை பார்த்தார்கள்.
இதை வைத்துப் பார்க்கையில் ஊழியர்களுக்கும் தரையிறங்கும் பயணிகளுக்கும் இடையில், அந்த இடங்களில்தான் அணுக்கத் தொடர்பு இருந்தது என்பது தெரியவருகிறது.
இதுவே முதல் நிலை தொற்று என்றும் தொற்று ஏற்படுவதற்கான மூல இடமாக அந்த இடங்களே இருந்து இருக்கின்றன என்றும் இந்த விமான நிலையக் குழுமம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லீ சியோவ் ஹியாங் தெரிவித்தார்.
அந்தப் பகுதிகளில் வேலை பார்த்த ஊழியர்கள், இடைவழிப் பயணிகள் பகுதிகளிலும் புறப்பாட்டுக் கூடங்களிலும் கீழ்த்தளம் 2ல் உள்ள உணவுக் கூடத்திலும் மற்றவர்களுடன் கலந்துறவாடினார்கள். இதன் காரணமாக இரண்டாம் நிலை தொற்றுக் குழுமம் ஏற்பட்டு அது பெருகி கடைசியில் 100 பேருக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள்.
விமான நிலையத்தின் இதர பகுதிகள் கிருமியின்றிச் சுத்தமாக இருந்தன என்றும் திரு லீ கூறினார்.
எடுத்துக்காட்டாக மத்திய இடைவழிப் போக்குவரத்துப் பகுதியில் ஏறத்தாழ 2,000 பேர் வேலை பார்க்கிறார்கள். இப்போதைய நிலவரப்படி அவர்களில் ஏறக்குறைய 97 விழுக்காட்டினருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒரு குறிப்பிட்ட தொற்றுக் குழுமத்தைத் தவிர வேறு யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.
அந்தத் தொற்றுக்குக் காரணம் வருகைக் கூடத்தில் இருந்தவர்களுடன் ஊழியர்கள் அணுக்கத் தொடர்பில் இருந்தது என்பது புலன்விசாரணை மூலம் தெரியவந்ததாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார். இன்றைய தேதியில் விமான நிலைய ஊழியர்களில் மொத்தம் 43 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்து இருக்கிறது.
அவர்களில் கிட்டத்தட்ட 10 பேர் முனையம் 3ல் உள்ள பயணிகள் வருகைப் பகுதியில் இருக்கும் வருகைக் கூடத்திலும் 11 பேர் சரக்குப் பெட்டிகள் எடுக்கும் கூடத்திலும் வேலை பார்ப்பவர்கள்.
இந்த 21 பேரில் 12 பேர் கீழ்த் தளம் 2ல் இருக்கும் உணவுக் கூடத்திற்குச் சென்று இருக்கிறார்கள். அது முதல் அந்த உணவகத்திற்குச் சென்று வந்த 10 ஊழியர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலைய பொது இடங்களில் ஊழியர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறை என்றும் திரு லீ கூறினார். அலுவலகங்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் முதலானவை அந்தப் பொது இடங்களில் அடங்கும்.
இவ்வேளையில், சாங்கி விமான நிலையம் முனையம் 3 கிருமித்தொற்று குழுமமாக மாறியதற்கு ஒரு குடும்பமே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் அந்தக் குடும்பத்தினர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்லர் என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெளிவுபடுத்தி உள்ளது.
இப்போது சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே செயல்படும் ஒரே பயணிகள் விமானம் 'வந்தே பாரத்' விமானங்களாகும்.
இந்த விமானங்கள் முனையம் ஒன்றில் மட்டுமே செயல்படுகின்றன என்று சிங்கப்பூர் போக்குவரத்து, வெளியுறவு, மனிதவள அமைச்சுகள் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அனைத்துலக விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.